சென்னை உயர்நீதிமன்றம் என்பதை தமிழ்நாடு உயர்நீதிமன்றமாக மாற்ற வைகோ வலியுறுத்தல்
கோவை: சென்னை உயர்நீதிமன்றம் என்பதை தமிழ்நாடு உயர்நீதிமன்றமாக மாற்றினால் சிறப்பாக இருக்கும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
கோவை மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் சிந்தாபுதூரில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு வைகோ அளித்த பேட்டி:
ம.தி.மு.க. கட்சி தொடங்கிய 23 ஆண்டுகளாக பல்வேறு ஏற்ற, தாழ்வுகளை சந்தித்து வருகிறோம். மக்களின் வாழ்வாதாரத்துக்காகவும் ஜனநாயகத்தை பாதுகாக்கவும் ம.தி.மு.க. போராடி கொண்டு வருகிறது. நடந்து முடிந்த தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் நாள்தோறும் படுகொலைகள் நடந்து வருகிறது. இதனால் பெண்கள் அச்சத்துடன் நடமாட வேண்டிய நிலை உள்ளது.

பூரண மதுவிலக்கு அவசியம்
சென்னை சுவாதி கொலை, வினுப்பிரியா தற்கொலை, 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் போன்ற கொடூர சம்பவங்கள் வேதனையை தருகிறது. இதை தான் மதுவிலக்கு போராட்டத்தின் போது நாங்கள் சுட்டிக் காட்டினோம். எனவே பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

முழுமதுவிலக்கு கொள்கை தேவை
அ.தி.மு.க. அரசு 500 டாஸ்மாக் கடைகளை மூடப்படும் என்றும் கடைகள் திறப்பு நேரம் குறைக்கப்படும் எனவும் அறிவித்தது. ஆனால் ஆளுங்கட்சியினர் மதுக்கடைகளில் 2 மடங்கு விலையை வைத்து விற்பனை செய்கிறார்கள். கால அட்டவணை வெளியிடப்பட்டு முழு மதுவிலக்கு கொள்கையை அரசு அறிவிக்க வேண்டும்.

நம்பகத்தன்மை கேள்விக்குறி
தமிழகத்தில் காவல் துறையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக உள்ளது. இதனால் தான் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு, கண்டெய்னரில் பிடிபட்ட ரூ.570 கோடி வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர்கள் போராட்டத்தை ம.தி.மு.க. வரவேற்கிறது.

தமிழ்நாடு உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கு எதிரான சட்டதிருத்தத்தை ரத்து செய்ய வேண்டும். மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்பதை சென்னை உயர்நீதிமன்றம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதை வரவேற்கிறோம். ஆனால் தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றினால் சிறப்பாக இருக்கும்.

மத்திய அரசு தடுக்க வேண்டும்
பாலாற்றின் குறுக்கே ஆந்திரா அரசு தடுப்பணையின் உயரத்தை உள்ளதை மத்திய அரசு தடுக்க வேண்டும். தமிழக மீனவர்களின் பிரச்சினைகளிலும் மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் நலக்கூட்டணியில் நாங்கள் 4 கட்சிகளும் நிரந்தர உறுப்பினர்கள். உள்ளாட்சி தேர்தலிலும் நாங்கள் கூட்டணியாக தான் இருப்போம். ஆனால் தே.மு.தி.க.- த.மா.கா. உள்ளாட்சி தேர்தலின் போது முடிவு எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்கள்.

சித்தரிக்கக் கூடாது
சென்னை சுவாதி கொலை, கொடூரமான செயலாகும். காவல்துறை பல்வேறு முகாந்திரம் அடிப்படையில் ராம்குமாரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தை சிலர் வேறு விதமாக சித்தரிப்பது தமிழகத்திற்கு நல்லதல்ல. மருத்துவ கல்லூரி மாணவர்கள், ஒரு நாயை மாடியில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் கண்டிக்கத்தக்கது. தலைகுனிவான செயலாகும்.
இவ்வாறு வைகோ கூறினார்.












Click it and Unblock the Notifications