தேர்தலில் போட்டியில்லை என்ற முடிவில் மாற்றமில்லை: வைகோ உறுதி
கோவை: சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்ற தனது முடிவில் எந்த வித மாற்றமும் இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
கோவில்பட்டி சட்டசபை தொகுதியில் போட்டியிடாமல் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ விலகியதால், மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அவர்கள், விடிய விடிய வைகோவை சமாதானப்படுத்தும் வேலைகளில் இறங்கினர். ஆனால் தனது முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தல் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள மதிமுக 29 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இரண்டு தொகுதிகளை வீரலட்சுமிக்கும், நாகை திருவள்ளுவனுக்கும் கொடுத்து விட்டார் வைகோ.

கோவில்பட்டி தொகுதியில் தான் போட்டியிடுவதாக வைகோ கடந்த 16ம் தேதி அறிவித்தார். இதற்காகவே கூட்டணி கட்சிகளிடம் இத்தொகுதியை கடுமையாக போராடி வைகோ பெற்றார். தொண்டர்களும் உற்சாகமாக தேர்தல் வேலைகளைத் தொடங்கினர். வைகோவும் தேர்தலில் போட்டியிடுவதில் ஆர்வமாகவே இருந்தார்.
20 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதாலும், இதுவரை சட்டப் பேரவை தேர்தலில் வென்றதில்லை என்பதாலும் இந்த முறை எப்படியும் வென்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளை வைகோ செய்தார்.
கோவில்பட்டி தொகுதியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை வைகோ நேற்று முன்தினம் தொடங்கினார். முதல் நிகழ்ச்சியாக வடக்கு திட்டங்குளம் கிராமத்துக்கு மாலை 5 மணியளவில் சென்றார். அங்குள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்ட வைகோ, வேனில் இருந்து இறங்கி சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றார்.
அப்போது அங்கிருந்த இளைஞர்கள் சிலர், தேவர் சிலைக்கு வைகோ மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். உடுமலைப்பேட்டை சங்கர் கொலைக்கு கண்டனம் தெரிவித்ததையும், அவரது மனைவி கவுசல்யாவுக்கு ஆறுதல் கூறியதையும் குறிப்பிட்டு வைகோவுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனால் சிலைக்கு மாலை அணிவிக்காமல் வேனுக்கு வந்த வைகோ, மைக்கில் பேசினார்.
அப்போது அவர், `நான் ஜாதிக்கு அப்பாற்பட்டவன். தேவர் சமுதாயத்துக்கு பல்வேறு உதவிகளைச் செய்துள்ளேன். தேவர் - நாயக்கர் மக்களுக்கு இடையே ஜாதி மோதலை உருவாக்க முயற்சி நடக்கிறது. இது தேர்தல் சமயமாக இருக்கிறது. இல்லையெனில் 100 பேர் வேல், கம்பு, அரிவாளுடன் வந்தாலும் எதிர்த்து நிற்கும் சக்தி எனக்கு உண்டு. துப்பாக்கிகளை கண்டு அஞ்சாதவன் நான். இதற்கு அஞ்சமாட்டேன் என்று ஆவேசமாக கூறினார்.
இதையடுத்து மீண்டும் வேனில் இருந்து இறங்கிய வைகோ, தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார். அந்த இளைஞர்கள் மீண்டும் கோஷ மிட்டதை தொடர்ந்து, அவர்களை போலீஸார் அடித்து விரட்டினர். அதன்பிறகு தேவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, வைகோ அங்கிருந்து சென்றார்.
நேற்று முன்தினம் மாலை வரை கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட வைகோ ஆர்வமாகவும், உற்சாகமாகவும் இருந்தார். வடக்கு திட்டங்குளம் சம்பவம்தான் அவரை மாற்றி விட்டது. இச்சம்பவத்தால் வைகோ மிகவும் மன வேதனை அடைந்துவிட்டார். இரவு முழுவதும் இச்சம்பவம் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, ஆட்சி மன்றக் குழு செயலாளர் கணேச மூர்த்தி, துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்தியா உள்ளிட்டோரிடம் இரவு முழுவதும் இந்த பிரச்சினை குறித்து அவர் விவாதித்துள்ளார்.
தன்னை மையமாக வைத்து ஜாதி மோதலை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்கு நாம் இரையாகக் கூடாது. எனவே, நான் தேர்தலில் போட்டியிடவில்லை என அவர்களிடம் வைகோ கூறியுள்ளார். வைகோவின் முடிவை கட்சி நிர்வாகிகள் ஏற்கவில்லை. ஆனால், வைகோ தொடர்ந்து பேசி நேற்று காலையில் அவர்களை சம்மதிக்க வைத்தாராம்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்காக நேற்று காலை கோவில்பட்டி வந்த வைகோவிற்கு சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கருப்புக் கொடி காட்ட முயன்றனர். அதைத் தொடர்ந்து நடந்த மோதல் ஆகியவை வைகோவை மேலும் வேதனை அடையச் செய்துள்ளது.
கோவில்பட்டியில் மனுதாக்கல்
சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற தனது முடிவை உறுதியாக இருந்த வைகோ, யாரிடமும் தெரிவிக்காமல், விநாயகா ரமேஷ் என்பரை வேட்புமனு தாக்கல் செய்யச் சொன்னார். இதனை ஊடகத்தில் பார்த்த மதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மநகூ தலைவர்கள் அதிர்ச்சி
வேறு சட்டசபைத் தொகுதியில் வைகோ போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பகிரங்கமாக அறிவிக்கவே, தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். கூட்டணி கட்சி தலைவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். வைகோவை தொடர்பு கொண்ட கூட்டணி கட்சித் தலைவர்கள், முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தினர்.
முடிவில் மாற்றமில்லை
இந்த நிலையில் இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்ற தனது முடிவில் எந்தவித மாற்றமுமில்லை என்று கூறினார். திருமாவளவன், விஜயகாந்த், முத்தரசன், ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் தன்னிடம் பேசினார்கள் என்றும், தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியதாகவும் வைகோ கூறினார்.
நாடகமாடவில்லை
ஆனால் கோவில்பட்டி தொகுதியில் மட்டுமல்ல வேறு எந்த தொகுதியிலும் போட்டியிட மாட்டேன் என்று கூறினார். தன்னுடைய அறிவிப்பு வெறும் நாடகமல்ல என்று கூறிய வைகோ, ஒரு நாள் முழுவதும் நன்றாக யோசித்து எடுத்த முடிவு என்று தெரிவித்தார்.
வாழ்நாள் முழுவதும் பச்சை
விவசாயம் அழிந்துவிட்டதால் பச்சை தலைப்பாகை அணிவதாக வைகோ விளக்கம் அளித்துள்ளார். இனி வாழ்நாள் முழுவதும் பச்சை தலைப்பாகை அணியப்போவதாகவும் வைகோ அறிவித்துள்ளார். ஏற்கனவே கழுத்தில் கறுப்புத்துண்டு அணியும் வைகோ இனி தலையில் பச்சைத்துண்டு அணியப் போகிறாராம்.












Click it and Unblock the Notifications