தேமுதிகவுடன் தொகுதி உடன்பாடு மட்டுமே வைத்துக்கொண்டோம்: வைகோ
சென்னை: தேமுதிகவுடன் மக்கள் நலக் கூட்டணி தொகுதி உடன்பாடு மட்டுமே வைத்துகொண்டது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்தித்த தேமுதிக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வியைத் தழுவியது. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் போட்டியிட்ட உளுந்தூர்பேட்டை தொகுதியில் அவருக்கு டெபாசிட் கூட கிடைக்கவில்லை.

அதேபோல் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலை தமாகா தனித்து சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனிடையே வரும் உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டி என அக்கட்சியின் பொருளாளர் ஏ.ஆர். இளங்கோவன் தருமபுரியில் நேற்று அறிவித்தார்.
இந்த நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ, தேமுதிகவுடன் மக்கள் நலக் கூட்டணி தொகுதி உடன்பாடு மட்டுமே செய்து கொண்டது. கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறுவது அவர்களது உரிமை.
மக்கள் நலக் கூட்டணியில் உள்ள மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலை இணைந்து சந்திக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications