மோடி ஆட்சி சிறப்பாக உள்ளது: தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்டுள்ளது: வைகோ
சென்னை: லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ம.தி.மு.க இடம் பெற்றிருந்தது. அதன் அடிப்படையில் இந்த ஆதரவு வழங்கப்படுகிறது. மோடி ஆட்சி சிறப்பாக உள்ளது. தொழில் நுட்ப புரட்சி ஏற்பட்டு இருக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
உள்ளாட்சி இடைத்தேர்தலில் தமிழக பாரதிய ஜனதா கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளது.
லோக்சபா தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட ம.தி.மு.க. உள்ளாட்சி இடைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டது. தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் உள்ளாட்சி இடைத்தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக அந்த கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்.

வைகோ – தமிழிசை
இன்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை, சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்தார். அவருக்கு வைகோ பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பாஜகவுக்கு ஆதரவு
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத் தேர்தலில் பா.ஜனதாவுக்கு ம.தி.மு.க. ஆதரவு அளிக்க வேண்டும் என்று வைகோவிடம் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக் கொண்டார். இந்த சந்திப்பின் போது, தமிழக பாஜக அமைப்புச் செயலாளர் மோகன் ராஜீவும் உடன் இருந்தார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர்.

மதிமுக முடிவு
உள்ளாட்சி இடைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும்படி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக் கொண்டார். ஏற்கனவே இது குறித்து அறிந்ததால் உயர்நிலைக் குழு கூட்டத்திலும் ஆலோசிக்கப்பட்டது. அதில் எடுத்த முடிவின்படி நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ம.தி.மு.க. ஆதரவு வழங்கும் என்று வைகோ கூறினார்.

மோடி ஆட்சி
ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ம.தி.மு.க இடம் பெற்றிருந்தது. அதன் அடிப்படையில் இந்த ஆதரவு வழங்கப்படுகிறது. மோடி ஆட்சி சிறப்பாக உள்ளது. தொழில் நுட்ப புரட்சி ஏற்பட்டு இருக்கிறது என்றும் வைகோ கூறினார்.

தமிழிசை சவுந்தரராஜன்
தொடர்ந்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன், உள்ளாட்சி இடைத் தேர்தலில் பாஜகவுக்கு ம.தி.மு.க. ஆதரவு அளிக்கும்மென்று வைகோ கூறியுள்ளார். எங்களுடன் கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளிடமும் ஆதரவு கேட்டுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications