அடி பார்க்கலாம்... எஸ்.பியுடன் வாக்குவாதம் செய்த வைகோ: ரயிலை மறித்து கைதானார்
கோவில்பட்டி: விவசாய கடன்களை ரத்து செய்யக்கோரி கோவில்பட்டியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
தஞ்சையில் விவசாயி பாலன் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், விவசாய கடன் தள்ளுபடி, மற்றும் ஜப்தி நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேமுதிக. மக்கள் நல கூட்டணி சார்பில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

இந்த போராட்டத்தில் பங்கேற்க வைகோ மற்றும் அவரது தொண்டர்கள் வராமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இருப்பினும் மாற்று வழியில் ரயில்வே டிராக்கில் தொண்டர்களுடன் வந்து அமர்ந்தார் வைகோ.
மறியல் போராட்டம் நடத்திய போது மாவட்ட எஸ்.பி. அஸ்வின் கோட்னிஸ், வைகோ உடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், தயவு செய்து கலைந்து செல்லுங்கள் இல்லையேல் கைது செய்வோம் என எச்சரித்தார். இந்நேரத்தில் ஆத்திரப்பட்ட வைகோ எஸ்பியிடம் வாக்குவாதம் செய்ய துவங்கினார்.
எலக்ட்ரிக் லைன் கட் ஆகி விட்டதாக கூறுகின்றீர்கள். எங்கள் போராட்டத்தால் ரயில் நின்று விட்டதாக செய்தி போக கூடாது என்பதற்காக இப்படி செய்கிறீர்கள்.
நீங்கள் வட மாவட்டத்தை சேர்ந்தவர் தானே, நாங்கள், கல்லை கொண்டு வீசினோமா ? வன்முறையில் ஈடுபட்டோமா ? கம்பால் அடித்தோமா ? ஐபிஎஸ் படித்த எஸ்.பி. படித்தவருன்னு நினைச்சேன். 78 முறை கைதாகி, 36 முறை ஜெயிலுக்கு போகியிருக்கிறேன்.
துப்பாக்கி குண்டு அடித்தால் , கண்ணீர் புகை அடித்தால் சந்திப்போம். பிளீஸ் லிசன் மீ , யு போர்ஸ், அரசியலமைப்பு சட்டத்தை படித்திருக்கிறாயா ? பித்தலாட்ட வேலை எஸ்பி.க்கு எதுக்கு ? இந்த பிராடு வேலை எஸ்.பி.,க்கு எதுக்கு ?
அடி, அடி பார்ப்போம், நான் கவலைப்படலை, அடிச்சு பார், ( வைகோவின் பேச்சை கேட்டு திணறிய எஸ்.பி, ஏதும் பேசாமல் திரும்பி சென்றார். முதல் லத்தி கம்பு என் மீது தான் விழும், எனது தலையை கொடுப்பேன் , தொண்டர்கள் மீது விழாமல் பாதுகாப்பேன் என்று பேசிக்கொண்டே இருந்தார் வைகோ.
நான் பேச மாட்டேன். டிஜிபியையே நான் சார்ஜ் பண்ணுறேனே, ஐஜி என்ன பேசுறது ? மாலை 5 மணிக்கு மேல் பேச சொல்லு. போலீஸ் அக்கிரமம் நடக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வருவோம். ரோட்டில் பீட் போட மாட்டோம். முதல்வர் வரும் போது 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு போலீசார் நிறுத்தப்படுகின்றனர் என்றார்.
இதனையடுத்து போலீசார், வைகோ மற்றும் தொண்டர்களை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
வைகோவின் மறியல் போராட்டத்தினால் நாகர்கோவில்- கோயம்புத்தூர், பொள்ளாச்சி , திருச்செந்தூர் பயணிகள் ரயில் பல மணி நேரம் நடு வழியில் நிறுத்தப்பட்டது. இதனால் உரிய நேரத்தில் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications