விருதுநகரில் தேர்தல் பணியை தொடங்கினார் வைகோ… தொழிலதிபர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்!
சென்னை: மதிமுக பொது செயலாளர் வரும் லோக்சபா தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடப்போவது உறுதியாகியுள்ளது.
மூன்றாம் கட்ட மறுமலர்ச்சிப் பயணத்தை விருதுநகர், சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேற்கொண்ட வைகோ, பொதுமக்களையும், தொழிலதிபர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலை சந்திக்க மதிமுக தயாராகிவிட்டது. இதனையொட்டி மக்களைச் சந்திக்கும் மறுமலர்ச்சிப் பயணத்தை மூன்று கட்டமாக நடத்தி முடித்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ.
மூன்றாவது கட்டமாக விருதுநகர் தொகுதிக்குட்பட்ட சாத்தூர், சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேற்கொண்டார்.
சட்டமன்ற தொகுதிகள்
மூன்றாம் கட்ட மறுமலர்ச்சி பயணத்தில் சாத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் உள்ள பல கிராமங்களுக்கு சென்றுஅவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
மக்களிடம் ஆதரவு
மூன்றாம் நாள் பயணத்தில் வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் தலைவர் வைகோ அம்மாபேட்டையில் துவங்கி ஆலங்குளத்தில் நிறைவடைந்தது.
வழியெங்கும் மக்கள்
துரைசாமிபுரம் , இடையன்குளம் , மேட்டுப்பட்டி காக்கிவாடன்பட்டி, கான்சாபுரம் , மம்சாபுரம் , நதிக்குடி , ஆத்தூர் , திருவேங்கிடபுரம், கொங்கன்குளம் , புளிப்பாரைபட்டி, மாதாங்கோவில்பட்டி , கல்லம நாயக்கன்பட்டி வழியாக சென்று ஆலங்குளத்தில் நிறைவு செய்தார். ஆலங்குளத்தில் நடைபெற்ற நிறைவு பொது கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
தொழிலதிபர்களுடன்
சிவகாசியில் உள்ள முக்கிய தொழிலதிபர்களை அவர் நேரில் சந்தித்து , தேர்தலில் தனக்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொண்டார்.
சமுதாயத் தலைவர்கள்
இது தவிர விருதுநகர் லோக்சபா தொகுதிக்குப்பட்ட பகுதிகளில் வசிக்கும் சமுதாயத் தலைவர்களையும் அவர் சந்தித்து ஆதரவு திரட்டியுள்ளார் என அவரது கட்சியினர் தெரிவித்தனர்.
தேர்தலுக்கு ரெடி
லோக்சபா தேர்தலுக்கு தேதி அறிவிக்கப்படா விட்டாலும், யாருடன் கூட்டணி என்று முடிவு செய்யாவிட்டாலும் தேர்தல் பணியை தனது தொகுதியில் தொடங்கிவிட்டார் வைகோ. இந்த முறை வைகோவை எப்படியாவது நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவிடவேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளனர் அவரது கட்சியினர்.