பாம்பாற்றில் கேரளா அணை கட்டுவதை தடுக்க வீட்டுக்கு ஒருவர் வாருங்கள்: வைகோ அழைப்பு
திருப்பூர்: பாம்பாற்றின் குறுக்கே கேரள அரசு அணைகட்டுவதை தடுக்க மிழக மக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்று வைகோ கேட்டுக்கொண்டுள்ளார். முதல் கட்டமாக வீட்டுக்கொரு இளைஞர் வெளியே வந்து போராட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீராதாரமாக விளங்கும் பாம்பாற்றின் குறுக்கே ரூ.26 கோடி மதிப்பில் தடுப்பணை கட்ட கேரள அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கான அடிக்கல் நாட்டியதோடு பணிகளும் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில் அணை கட்ட அடிக்கல் நாட்டிய கேரள அரசை கண்டித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று முதல் திருப்பூர், கரூர் மாவட்ட கிராமங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரசார பயணம் மேற்கொண்டுள்ளார். .
அமராவதி நகர் பேருந்த நிலையத்தில் இருந்து இன்று பிரசாரம் தொடங்கிய வைகோ, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

முல்லை பெரியாறு போராட்டத்தில் மக்களை திரட்டி போராட்டங்கள் நடத்தி கேரளாவுக்கு செல்லும் அனைத்து வழித்தடங்களையும் அடைத்து கேரள அரசு தன்னகத்தே அடக்கத்துடன் இருக்கும்படி நாம் செய்தோம். இந்த பிரச்சினையில் தமிழகத்தை பழிவாங்க கேரள அரசு பல்வேறு வழிகளில் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறது.
தற்போது அமராவதி அணைப்பகுதியில் நீராதாரமான பாம்பாற்றின் குறுக்கே அணைகட்டும் பிரச்சினைக்கு மக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும். வீட்டுக்கொரு இளைஞர் முதல் கட்டமாக வெளியே வந்து போராட வேண்டும். அடுத்த கட்டமாக எங்களது பாணியில் (ம.தி.மு.க.) அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

தமிழகத்தை அண்டை மாநிலங்கள் தொடர்ந்து வஞ்சித்து வருகின்றன. ஆனால் அதை தடுக்க மத்திய அரசு முன் வருவதில்லை. தமிழக மக்களின் பிரச்சினைகளை தடுக்க மத்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும். அப்படி எவ்வித முயற்சியும் செய்யவில்லையெனில் நமக்கு மத்திய அரசு எதற்கு?
பாம்பாற்றின் குறுக்கே அணை கட்ட கேரள அரசு முறையாக சுற்றுசூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் உரிய அனுமதி பெறாமல் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும்.

தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அணை கட்டுவதை தடுக்க வேண்டும். இதற்காக ம.தி.மு.க. கட்சி அனைத்து வழிகளிலும் தொடர்ந்து போராடும்.
அதன் தொடக்கமாக இன்று ம.தி.மு.க. இளைஞரணியினர் 150 வாகனங்களில் கிராமம் கிராமமாக பிரசாரம் செய்ய உள்ளோம். அமராவதி நகரில் தொடங்கி 220 கி.மீட்டர் சுற்றளவில் உள்ள கிராமங்களில் விவசாயிகளிடையேயும், பொதுமக்களிடையேயும் இந்த பிரச்சினை குறித்து எடுத்துரைப்போம் என்றார் வைகோ.
அமராவதி நகரில் பிரசாரம் தொடங்கிய வைகோ கல்லாபுரம், உத்திரா பாளையம், கொழுமம், குமரலிங்கம், மடத்துக்குளம், கணியூர், தளவாய்ப்பட்டினம், தாராபுரம், எரிசனம் பட்டணம், புஞ்சை காளையூர், பள்ளப்பட்டி பிரிவு பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். மாலையில் சின்ன தாராபுரத்தில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு வைகோ பேசுகிறார்.
பயணத்தின்போது, விவசாயப் பெருகுடிமக்கள் தலைவர் வைகோவுக்கு ஆதரவு தெரிவித்தனர். மாணவச் செல்வங்களும் பாலச்சந்திரன் முகமுடி அணிந்து வைகோவை வரவேற்றனர். பயணத்தில் கழக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், ஈரோடு மாவட்டச் செயலாளருமான அ.கணேசமூர்த்தி, திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.மாரியப்பன், கோவை மாவட்டச் செயலாளர் குகன்மில் செந்தில், கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், கொள்கைவிளக்க அணிச் செயலாளர் க.அழகுசுந்தரம், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டாக்டர் சி.கிருஷ்ணன், இளைஞர் அணி மாநிலச் செயலாளர் வே.ஈசுவரன் உள்ளிட்ட கழகத்தின் முன்னணியினரும், விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்துகொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications