இடைத்தேர்தல் என்றால் தொகுதியில் அனைத்து அமைச்சர்களும் முகாம், ஆனால் வெள்ளத்திற்கு இல்லையா?: வைகோ
சென்னை: இடைத்தேர்தல் என்றால் அந்த தொகுதியில் அனைத்து அமைச்சர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் முகாமிடுகிறார்கள். ஆனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வெறும் 5 அமைச்சர்களை அனுப்பி வைக்கிறார்கள் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்கள் நலக்கூட்டியக்கம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ நேரில் சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கனமழைக்கு கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியகாட்டுப்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலியாகியுள்ளனர். வெள்ளத்தில் சிக்கி பலியான சிறுமி ஸ்ருதியின் உடல் இதுவரை கிடைக்கவில்லை. பலியான அனைவரும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சாதி பேதம் பார்க்காமல் ஆதிதிராவிடர்களும், வன்னியர்களும் பலியானவர்களின் உடல்களை தூக்கி சுமந்துள்ளனர்.
பலியானவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். மழையால் 25 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட வாழை, சவுக்கு, கரும்பு ஆகியவற்றுக்கு ஏக்கருக்கு ரூ.1.50 லட்சமும், மாட்டுக்கு ரூ.50 ஆயிரமும், ஆட்டுக்கு ரூ.10 ஆயிரமும், கோழிக்கு ரூ.500ம், வீட்டுக்கு ரூ.25 ஆயிரமும் அளிக்க வேண்டும்.
மிகப் பெரிய ஏரியான வீராணம் ஏரி மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. அங்கு தற்போது ஆகாயத் தாமரைகளும், செடி, கொடிகளும் தான் உள்ளது. ஏரியை தூர் வாரினால் பாசனத்திற்கு நீரும் கிடைக்கும், வெள்ள பாதிப்பும் இருக்காது.
வீராணம் ஏரியை ரூ.40 கோடி செலவில் தூர் வாருவதாக அறிவித்தது அறிவிப்பாகவே உள்ளது. மழையால் கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களை அதிகாரிகள் கணக்கெடுக்க வேண்டும். முகாம்களில் இருப்பவர்களுக்கு நீர், மாற்று துணி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும்.
மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் முதல்வர் பார்வையிட முடியாது என்றாலும் அவர் ஒரு சில இடங்களுக்காவது நேரில் வர வேண்டும். அவர் வந்தால் தான் அதிகாரிகளுக்கு அச்சம் வரும்.
இடைத்தேர்தல் என்றால் அந்த தொகுதியில் அனைத்து அமைச்சர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் முகாமிடுகிறார்கள். ஆனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வெறும் 5 அமைச்சர்களை அனுப்பி வைக்கிறார்கள். வெள்ளத்தால் ஏற்பட்ட சேததத்தின் முழு விபரத்தை மக்கள் நலக்கூட்டியக்கம் சார்பில் முதல்வருக்கு அனுப்பி வைக்கப்படும்.
கடலூர் மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். முதல்வரை நேரில் சந்திப்பது எளிது அல்ல. 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்தே அவரை சந்திக்க இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications