1989-ல் கருணாநிதிக்கு பிரபாகரன் எழுதிய கடிதத்தை 27 ஆண்டுக்குப் பின் ரிலீஸ் செய்த வைகோ!
திருச்சி: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், திமுக தலைவரும் தமிழகத்தின் அப்போதைய முதல்வருமான கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தை 27 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியிட்டுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
திருச்சியில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் 1989-ல் தாம் ஈழத்துக்கு சென்றதை விவரித்த வைகோ அப்போது கருணாநிதிக்கு பிரபாகரன் எழுதிய கடிதத்தின் நகல் இன்னமும் தம்மிடம் இருப்பதாக கூறி வாசித்தார்.
பிரபாகரன் எழுதிய அக்கடிதத்தில் இடம்பெற்றுள்ளதாவது:

வைகோ தனது உயிரையும் பொருட்படுத்தாது எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில் அடர்ந்த கானகத்தின் நடுவே என்னையும் எனது சக தோழர்களையும் சந்தித்திப் பேச வைத்துள்ள துணிச்சலையும் தமிழ்ப்பற்றையும் பார்க்கும்போது நான் எனது மொழிக்காகவும் தமிழ் நாட்டுக்காகவும் இன்னும் ஆயிரம் தடவை இறக்கலாம் என்னும் மனத்தென்பே ஏற்படுகிறது.

அண்ணா உங்களது ஆட்சி தமிழகத்தில் மீண்டும் வந்துள்ளதையடுத்து நான் பெருமைப்படுகிறேன். இனித் தமிழகத்தின் தமிழ் இன உணர்வு மீண்டும் தழைத்தோங்கும். எம்மைப் பொறுத்தவரை நாம் எந்த லட்சியத்திற்காக ஆயுதமேந்திப் போராட்டினோமோ அந்த லட்சத்தியத்தில் வென்று வாழ்வோம் அல்லது அந்த லட்சியத்திற்காக சந்தோசத்துடன் மடிவோம். இன்று இந்திய ஆக்கிரமிப்பு ராணுவத்தின் நடவடிக்கையால் எமது நாடு சுடுகாடாகிக் கொண்டிருக்கிறது.

இதனை தமிழகத்தின் கவனத்துக்கும், இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சிகளின் கவனத்துக்கும் நீங்கள் கொண்டுவரவேண்டிய காலம் வந்துவிட்டது. அதனை நீங்களும் உங்கள் அமைப்பும் தான் செய்ய வேண்டும். அண்ணா நிச்சயம் எமது மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இந்திய ஆக்கிரமிப்பாளர்களின் துரோகத்தை நீங்கள் தமிழகத்தின் கவனத்துக்கு கொண்டுவர உதவுவீர்கள் என நான் நம்புகிறேன். இங்கு மீண்டும் மிகப் பெரிய தாக்குதலுக்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்த அபாய சூழலை கருதித்தான் கோபால்சாமி அண்ணணை இந்த முற்றுகை வளையத்திலிருந்து மிகுந்த கவலையுடன் தமிழ் நாட்டுக்கு திரும்ப அனுப்பிவைத்துவிட்டேன்.
இவ்வாறு நீள்கிறது அக்கடிதம்.
இதை தற்போது ஏன் வெளியிடுகிறீர்கள் என செய்தியாளர்கள் வைகோவிடம் கேட்டபோது, இலங்கை வனப்பகுதியில் பிரபாகரனை நான் சந்தித்தபோது அவர் இந்த கடிதத்தை எனக்குக் கொடுத்தார். அதிலிருந்து ஒரு சில மாதங்களுக்குப் பின்னர் நான் அக்கடிதத்தை கருணாநிதியிடம் கொடுத்தேன். ஆனால், அக்கடிதத்தை அழித்துவிட்டதாக கருணாநிதி பின்னாளில் என்னிடம் கூறினார். நான் அதன் பிரதி ஒன்றை இன்றளவும் பாதுகாத்து வைத்துள்ளேன். அந்தக் கடிதத்தின் உள்ளடக்கத்தை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதாலேயே அதனை இப்போது வெளியிடுகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications