தேர்தலில் எங்களால் வெற்றி பெற முடியவில்லை எனில்.... இப்படிதான் நடக்கும்- சொல்கிறார் வைகோ
சென்னை: என் பேரப்பிள்ளைகளே... செல்போன் சிங்கங்களே... தமிழகத்தில் மாற்றத்தை கொண்டுவருவது உங்களின் கைகளில்தான் இருக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். கருத்துக்கணிப்புகளை நம்பவேண்டாம் என்றும், வரப்போகும் சந்ததியை காப்பாற்ற இதை விட வேறு நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என்றும் வைகோ உருக்கமாக பேசியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சரியாக 9 தினங்களே உள்ளது. திமுகவிற்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று ஊடகங்களில் கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. மக்கள் நலக்கூட்டணி 10 சதவிகித வாக்குகள் மட்டுமே பெற வாய்ப்பு உள்ளது என்றும் சில இடங்களில் மட்டுமே 20 சதவிகித வாக்குகள் வரை பெறும் என்றும் அந்த கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்த கருத்துக்கணிப்புகள் பொய் என்றும் இதை நம்ப வேண்டாம் என்றும் மக்கள் நலக் கூட்டணியின் இணைய தளப் பக்கத்திற்கான வீடியோ பதிவு ஒன்றில் உருக்கமாக பேசியுள்ளார் வைகோ.
சில ஊடகங்களில் கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் வரும் தகவல்களை எல்லாம் நம்பாதீர்கள். பெரு மழையில் சென்னை சிக்குண்டபோது, செல்போன் புரட்சியாளர்கள்தான் மக்களைக் காத்தார்கள்.
எகிப்தில் ஏற்பட்டதைப் போல அலைபேசி புரட்சியாளர்கள்தான் தமிழ்நாட்டில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறவர்கள். என் போன்றவர்கள் செய்ய முடியாததை அவர்கள் செய்வார்கள். அவர்களிடம் கையெழுத்துக் கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு அடுத்த வரப் போகிற சந்ததியைக் காப்பாற்ற வேண்டுமென்றால், இதைவிட்டால் உங்களுக்கு வேறு சந்தர்ப்பம் கிடைக்காது.
இதுபோன்ற ஒரு கூட்டணி இனி அமையுமா என்று தெரியாது. தி.மு.க, அ.தி.மு.கவை எதிர்த்து, ஒருவேளை எங்களால் வெற்றி பெற முடியவில்லை என்றால், வரும் காலங்களில் தி.மு.கவும் அ.தி.மு.கவும் கொடுக்கும் சீட்டுகளை வாங்கிக் கொண்டு போவது வழக்கமாகிவிடும். என் போன்றவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்வார்கள். பெரியார் போன்று கட்சி நடத்த வேண்டியது வரும்.
எனக்கும் வயது எழுபதைத் தாண்டிவிட்டது. உங்களைப் பேரப் பிள்ளைகள் என்றே அழைக்கிறேன். உங்களைவிட சிறிய குழந்தைகளைப் பார்க்கும்போது, இவர்கள் பெரியவர்கள் ஆகும் வரையிலும் பார்க்கப் போகும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கப் போவதில்லை.
இவர்களின் எதிர்காலம் என்னவாகும்? என்ற கவலைதான் கண்முன் வருகிறது. உங்களால்தான் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். எந்த அரசியல் லாபத்துக்காகவும் இதை நான் கேட்கவில்லை.
52 வருடங்களாக நானும் பாடுபட்டுவிட்டேன். மூன்றாயிரம் கிலோமீட்டர் தமிழ்நாட்டின் நலனுக்காக நடந்திருக்கேன். முல்லைப் பெரியாறில் உரிமையைக் காக்கப் போராடியிருக்கிறேன். மீத்தேன் திட்டத்திற்கு எதிராகப் போராடியிருக்கிறேன். நியூட்ரினோவுக்கு எதிராகப் போராடி தடுத்திருக்கிறேன்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடி உலகக் கோடீஸ்வரனின் பகையை சம்பாதித்தேன். ஈழப் பிரச்னை என் உயிர் கொள்ளை. இறுதிவரையிலும் ஈழத்திற்காகப் போராடுவேன்.
உங்களுக்கு நான் சொல்வது புரிகிறதோ இல்லையோ... என் கடமை... என் பேரப் பிள்ளைகளுக்கு சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். இந்த நாட்டைக் காப்பாற்றுங்கள். மாற்றத்தைக் கொண்டு வருவது உங்கள் கைகளில்தான் இருக்கிறது என்று மிகவும் உருக்கமாகப் பேசியிருக்கிறார் வைகோ.
வைகோவின் இந்த பேச்சு மக்கள் நலக் கூட்டணியின் இணையப் பக்கங்களைக் கலக்கி வருகிறது. வைகோ பேசி முடித்ததும் முதல்வன் படத்தின் பின்னணி இசையை கோர்த்துவிட்டு மக்கள் நலக்கூட்டணி, தேமுதிக, தமாகாவிற்கு வாக்களியுங்கள் என்று கேட்கின்றனர். இதேபோல், " விஜயகாந்த், திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்ட தலைவர்களையும் பேச வைத்து, பதிவேற்றம் செய்யப்போகிறார்களாம்.
வைகோவின் பேச்சு கடந்த சில வாரங்களாகவே உணர்ச்சி வசப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த போதும் கண்கள் கலங்கிய நிலையில் உருக்கமாக சமூகவலைத்தளவாசிகளுக்கு இதுபோன்ற ஒரு கோரிக்கையை வைத்தார்.