லோக்சபா தேர்தலில் பாஜக அணியில் மதிமுக? வைகோவின் கனவு நிறைவேறுமா?
சென்னை: லோக்சபா தேர்தலில் அண்மைக்காலமாகவே மதிமுக பொதுச்செயலர் வைகோவின் பேச்சுகள் அவர் பாஜக அணியில் இணையப் போகிறார் என்பதை உறுதிப்படுத்தும் விதமாகவே இருந்து வருகிறது.
திமுகவை விட்டு வெளியேறி மதிமுகவை 1994ஆம் ஆண்டு வைகோ தொடங்கியது முதல் ஒவ்வொரு லோக்சபா தேர்தலிலுமே ஒவ்வொரு அணியில் இணைந்தே தேர்தலை எதிர்கொண்டு வந்துள்ளார்.

பாஜக, காங்கிரஸ் அணிகளில்
1998-2004ஆம் ஆண்டு பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் 2004-2008ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலும் இடம்பெற்றிருந்தது மதிமுக.

2009-க்குப் பின்னர் மாறிய நிலைமை
2009ஆம் ஆண்டு இலங்கை இறுதிப் போருக்குப் பின்னர் காங்கிரஸ், திமுகவுடன் நிச்சயமாக கூட்டணி இல்லை என்பது வைகோவின் அறிவிப்பாக இருந்து வந்தது.

பாஜகவா? அதிமுகவா?
இதனால் மதிமுகவுக்கு அதிமுக அணியில் இணைவது அல்லது பாஜக அணியில் இணைவது என்பதுதான் தற்போதுள்ள வாய்ப்பு.

சட்டசபை தேர்தல் அனுபவம்
கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக அணியில் இடம்பெற முயற்சித்து கடைசியில் வெறுத்துப் போய் சட்டசபை தேர்தலிலேயே போட்டியிடாமல் போனது மதிமுக. இதனால் மீண்டும் அதிமுக அணியில் அக்கட்சி இடம்பெறுவதற்கான சூழல் இல்லை.

ஒரே வழி பாஜக அணிதான்!
இந்நிலையில் ஒரே வாய்ப்பாக மதிமுகவுக்கு இருப்பது பாரதிய ஜனதா கட்சி மட்டுமே. இதை உணர்ந்துதான் வைகோவும் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருந்தார், என்.எல்.சி. நிறுவனத்தின் 51% பங்குகளை விற்பனை செய்வதை வாஜ்பாய் தடுத்து நிறுத்தினார் என்று இப்போது தொடர்ந்து பாராட்டுப் பத்திரம் வாசித்து வருகிறார்.

உறுதிப்படுத்தும் வைகோ
சென்னையில் அண்மையில் கூடிய மதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் கூட இதே கருத்தை வைகோ மட்டுமின்றி அனைத்து மாவட்ட செயலர்களுமே முன்வைத்ததாக தெரிகிறது. வைகோவும்கூட நாங்கள் யாருடன் கூட்டணி என நீங்கள் யூகிக்கிறோர்களோ அப்படியே நடக்கும் என்று பூடகமாகவே கருத்து தெரிவித்து வருகிறார்.

ஏன் நம்பிக்கை?
வைகோவைப் பொறுத்தவரையில் பாரதிய ஜனதாவுக்கு அதன் வாக்கு சதவீதம் 2%-ல் இருந்து 10% ஆக அதிகரித்திருப்பதாக வெளியான கருத்துக் கணிப்பு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கலாம். மேலும் காங்கிரஸுக்கு எதிரான அதிருப்தி அலை பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கையும் வைகோவுக்கு இருந்திருக்கலாம். இதனாலேயே அவர் பாஜக அணியைத் தேர்வு செய்திருக்கலாம்.

பாஜக கருத்து
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், வைகோ கூட்டணி பற்றி அறிவிக்கட்டும். பின்னர் பார்க்கலாம் என்றார்.

ஆறுதலாவது கிடைக்குமா?
இருப்பினும் லோக்சபா தேர்தலில் எங்களுக்கே 40 தொகுதிகளும் என்று அதிமுகவும் திமுகவும் பிரகடனம் செய்து வியூகம் வகுத்து வரும் நிலையில் வைகோவின் நம்பிக்கை பெரிய அளவு கைகொடுக்காது போனாலும் 'ஆறுதலை'யாவது அந்த கட்சியினருக்கு ஏற்படுத்தக் கூடும் என்பதுதான் மதிமுகவினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications