வைகோ தாயார் மாரியம்மாள் காலமானார்
திருநெல்வேலி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் இன்று காலையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 95. இவருக்கு வைகோ, வை.ரவிச்சந்திரன் என்ற 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.
வைகோவின் தாயார் மாரியம்மாள் கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி இன்று காலையில் மரணமடைந்தார்.
அவரது உடல் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கலிங்கப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட உள்ளது. நாளை இறுதி அஞ்சலி நடைபெறும் என்று மதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
95 வயதான மாரியம்மாள் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். சமீபத்தில் கலிங்கபட்டியில் நடைபெற்ற மதுவிலக்கு போராட்டத்தில் பங்கேற்றது நினைவிருக்கலாம்.
வைகோ கலிங்கப்பட்டி பயணம்
இதனிடையே தனது தாயாரின் மரணச் செய்தி பற்றிய தகவல் அறிந்த உடன் சென்னையில் இருந்து விமானம் மூலம் வைகோ சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு விரைந்துள்ளார். பொதுவாழ்வில் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்க பஞ்சாப் முதல்வர், டெல்லி முதல்வர், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை சந்தித்து அழைப்பு விடுப்பதற்காக டெல்லி சென்றிருந்த வைகோ, இன்று காலையில் சென்னை திரும்பினார். காலையில் தாயார் மரணமடைந்த செய்தி அறிந்த உடன் உடனடியாக விமானம் மூலம் மதுரைக்கு சென்று அங்கிருந்து சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு செல்ல இருப்பதாக மதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.