சம்பத் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் - வைகோ

சென்னை கூடுவாஞ்சேரி அடுத்த பெரு மாட்டு நல்லூர் முன்னால் ஊராட்சி மன்ற தலைவரும், ம.தி.மு.க பிரமுகருமான சம்பத்தை கடந்த டிசம்பர் மாதம் 19-ந்தேதி 7 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இது தொடர்பாக செல்வம், மதன், பிரபு, சத்யா, ராஜா, சதா சிவம், கலைவாணன் ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதே பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சம்பத் கொலை நடந்த இடத்தினை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, ஞாயிறன்று பார்வையிட்டார். பின்னர் சம்பத் வீட்டிற்கு சென்று சம்பத்தின் மனைவி சுதா, மகன் நவீன்குமார், மகள் கீர்த்தனா ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். சம்பத்தின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது வைகோவை 500க்கும் மேற்பட்ட பெண்கள், பொதுமக்கள் சூழ்ந்துக்கொண்டு இந்த கொலை ஒரு முக்கிய புள்ளியின் தூண்டுதலின் பேரில்தான் நடந்தது. இதுபோல் இந்த ஊராட்சியில் தொடர்ந்து 3 கொலைகள் நடந்துள்ளது. இதற்கு காரணம் அந்த முக்கிய புள்ளிதான். அவர் தற்போது தலைமறைவாக உள்ளார். எனவே உண்மையான குற்றவாளியை போலீசார் கைது செய்ய வேண்டும் என்று வைகோவிடம் பெண்கள் புகார் கூறி கதறி அழுதனர். பின்னர் சம்பத்திற்கு மதிமுக சார்பில் பொதுமக்கள் முன்னிலையில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ பேசியதாவது:
தனது மகள் கண்ணெதிரே நடந்த படுகொலை கொடூரமான மரணம். இந்த பகுதியில் பெரிய தூணாக இருந்த சம்பத்தை கட்சி இழந்து விட்டது. இதனால் இந்த ஊராட்சி மக்களுக்கு பெரும் இழப்பு. மேலும் இந்த ஊராட்சியில் தொடர்ந்து மூன்று கொலைகளை நடத்தி ஒற்றுமையாக இருந்த இந்த ஊராட்சியை சீரழித்து சின்னாபின்ன மாக்கியுள்ளனர்.
இது தொடர்பாக டி.ஜி.பி.யிடம் பேசுவேன். எனவே இந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகளை போலீசார் கைது செய்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications