இலங்கைக்கு எதிராக தமிழக சட்டசபை தீர்மானம் நிறைவேற்றம்.. வைகோ, சீமான் வரவேற்பு! ஜெ.க்கு புகழாரம்
சென்னை: இலங்கை போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக சட்டசபையில் ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேறியதற்காக, மதிமுகவின் வைகோ, நாம் தமிழர் கட்சியின் சீமான் போன்ற தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சீமான் கூறியதாவது: தமிழர்களுக்கு என்று ஒரு நாடு கிடையாது. ஆனால், நமக்கென்று ஒரு மாநிலம் உள்ளது. அந்த மாநிலத்தின் அரசாங்கம், இலங்கையின் கொடுமைகளுக்கு எதிராக சர்வதேச விசாரணை தேவை என்று தீர்மானம் கொண்டுவந்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு மத்திய அரசு பணியுமா, பணியாதா என்பதைவிட, பணிந்துதான் ஆக வேண்டும் என்பதுதான் யதார்த்தம்.

8 கோடி தமிழ் மக்களுக்கான ஒரு அரசு தனது சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு ஏற்கத்தான் வேண்டும். தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் மிகவும் அவசியமான ஒன்றாகும். இதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இனிவரப்போகும் தீர்வு ஒருபக்கம் இருக்கட்டும். தமிழர்கள் பட்ட பாடுகளுக்கும், காயத்துக்குமான மருந்தை முதலில் தடவ வேண்டும். அதற்கு, இலங்கையின் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கபட வேண்டும். காயத்தை ஆற்றுவதுக்கு முயற்சி செய்யவே காலதாமதம் செய்யப்படுகிறது. ஏற்கனவே 6 வருடங்கள் தாமதமாகிவிட்டது. இனியும் தாமதிக்க கூாடது.
வைகோ கூறியதாவது: நான் ஏற்கனவே, வரவேற்றிய கோரிக்கையைத்தான் தமிழக அரசு தற்போது ஏற்று தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. 2001ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த உடனேயே, இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்தார். இப்போது, சர்வதேச விசாரணை நடத்தவும் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார். இதற்காக தமிழ் மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு வைகோ தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications