மக்கள் மீது சுமையை ஏற்றிய மத்திய அரசு: ரயில் கட்டண உயர்வுக்கு வைகோ கண்டனம்

இது தொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் நீடிக்கும் கடைசி மணித்துளி வரை மக்களை வாட்டி வதைக்கும் முடிவுகளை நடைமுறைப் படுத்தும் என்பதற்கு இன்னொரு உதாரணம்தான் ரயில் கட்டண உயர்வு.
கடந்த ஜனவரி மாதத்தில் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே ரயில் கட்டணங்களை 20 சதவீதம் உயர்த்தி விட்டு, பிப்ரவரி மாதம் ரயில்வே பட்ஜெட்டில் கட்டண உயர்வு இல்லை என்று மோசடி அறிவிப்பைச் செய்தார் ரயில்வே அமைச்சர்.
ரயில்வே பட்ஜெட்டில், டீசல் விலை உயர்வின் காரணமாக ரயில் எரி பொருள் செலவு அதிகரிப்பதால், சரக்குக் கட்டணங்கள் அவ்வப்போது மாற்றி அமைக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது பயணிகள் கட்டணத்தையும் ஆறுமாதங்களுக்கு ஒருமுறை மாற்றி அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு எடுத்திருப்பது கண்டனத்திற்கு உரியது.
பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயிக்கும் பொறுப்பை மத்திய அரசு கைகழுவிவிட்டதால், தொடர்ந்து அவற்றின் விலை உயர்ந்து வருகிறது. இதேநிலைதான் இனி ரயில்வே கட்டணத்திற்கும் இருக்கும். டீசல் விலை உயரும்போதெல்லாம் ரெயில்வே கட்டணமும் உயர்த்தப்படும் ஆபத்து இருக்கிறது.
ரயில்வே சரக்குக் கட்டணம் இந்த ஆண்டில் மட்டும் 7.2 சதவீதம் உயர்த்தப்பட்டது. தற்போது மேலும் 1.7 சதவீதம் சரக்குக் கட்டணம் உயர்த்தப்படுவதால், போக்குவரத்துச் செலவு அதிகரிக்கும். இதனால், விலைவாசி மேலும் உயர்ந்து, ஏழை-எளிய நடுத்தர மக்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். மத்திய அரசு, ரயில் பயணிகள் கட்டணத்தையும் உயர்த்தி மக்கள் மீது பெரும் சுமையை ஏற்றி உள்ளது.
வரலாறு காணாத ஊழல்களால் பல லட்சக் கணக்கான ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த காங்கிரஸ் கூட்டணி அரசு, மக்கள் நலனில் சிறிதும் அக்கறையின்றி பொறுப்பற்ற தன்மையுடன் இயங்கி வருகிறது. காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக, ரூபாயின் மதிப்பு அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. பொருளாதார வளர்ச்சி என்பது வெறும் ஏட்டளவில்தான் இருக்கிறது.
பண வீக்கத்தைக் குறைப்பதற்கோ, விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்தவோ மத்திய அரசு சிறு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை என்பதால், மக்கள் கொதித்துப்போய் உள்ளனர். இதனை உணர்ந்து கொண்டு மத்திய அரசு உடனடியாக ரயில்வே பயணிகள் கட்டணம், சரக்குக் கட்டண உயர்வை திரும்பப் பெறவேண்டும் என்று வைகோ தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications