"ஏமாற்றிய ஜெ. அரசு.. வஞ்சித்த கருணாநிதி அரசு... கைகொடுக்கும் மக்கள் நல கூட்டணி அரசு”- ஈரோட்டில் வைகோ
ஈரோடு: ஈரோடு, கோபிச் செட்டிப்பாளையத்தில் நடைபெற்ற மதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ நான் கள்ளத்தோணி என்பது பிரச்சாரத்திற்கு அழைத்தபோது தெரியவில்லையா என்று காங்கிரசினை சாடியுள்ளார். மேலும், திமுக மற்றும் அதிமுக கட்சிகளையும் தாக்கி உரையாற்றினார்.
வைகோ தலைமையிலான மக்கள் நல கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தில் நேற்றிரவு நடந்தது. அதில் உரையாற்றிய அவர், "ஒரு பத்திரிகையில் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், கள்ளத்தோணி வைகோ என்று கூறியுள்ளார். இங்கே நான் அவருக்கு பதில் கூற வந்துள்ளேன்.

2004 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் என்னை பிரச்சாரத்துக்கு கோபிக்கு அழைத்தீர்களே அப்போது நான் கள்ளத்தோணி என்பது தெரியவில்லையா? நான் நேரடியாக உங்களை கேட்கிறேன். எந்த அடிப்படையில் நீங்கள் தி.மு.கவுடன் கூட்டணி வைத்தீர்கள். சுயமரியாதையும், மானமும், ரோஷமும் காங்கிரஸ்காரர்களுக்கு என்றுமே கிடையாதா?
எந்த அடிப்படையில் தி.மு.கவுடன் கூட்டணி வைத்தீர்கள் என்பதற்கு மக்களுக்கு நீங்கள் விளக்கம் தர வேண்டும். அ.தி.மு.கவினர் பட்ட பகல் கொள்ளைக்காரர்கள். தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 2,422 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
இந்தியா முழுவதும் ஒரு கல்வியாண்டில் சமஸ்கிருத மொழியை மூன்றாவது மொழியாக திணிக்கப் போவதாக மோடி அரசு அறிவித்துள்ளது. இதைவிட அக்கிரமம் எதுவும் இருக்க முடியாது. நான் நேற்று வரை அரசு ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுக்கவில்லை.
கோபியில் இருந்து 15 லட்சம் அரசு ஊழியர்களை கேட்கிறேன். உங்களை ஏமாற்றியது ஜெயலலிதா அரசு. ஆனால், உங்களை வஞ்சித்தது கருணாநிதி அரசு என்பதை மறந்து விடாதீர்கள். எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள். உங்கள் கோரிக்கைகளை பாரபட்சமின்றி தீர்த்து தருகிறோம்" என்று பேசினார்.












Click it and Unblock the Notifications