அடையாளம் மாறிய வைகோ: கல்லூரி கலைவிழாவில் பேச்சு
மதுரை: ஒரு நாடு முன்னேற்றம் ஏற்பட வேண்டுமென்றால் கல்வி நிறுவனங்களில் விளையாட்டுத்துறைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில், கல்லூரி கலை விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சேவியர் வேதம் தலைமை தாங்கினார். துணை முதல்வர் காட்வீன் ரூபஸ் வரவேற்றார்.
விழாவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழர்களுக்குச் சொந்தம்
இயல், இசை, நாடகம் இவை மூன்று கலைகளும் தமிழர்களுக்குச் சொந்தமானவை. சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கண்ணகி மாதவி வாழ்ந்த காலத்தில் தமிழகத்தில் இவை தோன்றின.

விளையாட்டுக்கு முக்கியத்துவம்
ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது விளையாட்டுத்துறைக்கு முக்கிய பங்கு உண்டு. எனவே ஒவ்வொரு கல்வி நிறுவனங்களிலும் விளையாட்டுத்துறைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
மாணவர்கள் விளையாட்டுத் துறையில் முன்னேற்றம் கண்டால், அவர்கள் உடல் மற்றும் மனரீதியாக பலம் வாய்ந்தவர்களாக காணப்படுவார்கள். இதனால் வேற்றுமை களையப்பட்டு ஒற்றுமை ஓங்கும்.

தமிழர்களுக்கு குடியுரிமை
ஆடை நாகரிகத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் தமிழர்கள்தான். அப்படிப்பட்ட தமிழர்களை இலங்கை ராணுவத்தினர் இரக்கமின்றி நிர்வாணப்படுத்தி படுகொலை செய்தனர். தமிழர்கள் பிழைப்பிற்காக இலங்கைக்கு வந்தவர்கள். அவர்களுக்கு ஏன் குடியுரிமை வழங்க வேண்டுமென்று சிங்கள அரசு கூறிவருகிறது. ஆனால் இலங்கையில் வாழும் தமிழர்களில் பலர் பூர்வீக குடிமக்கள்.

மறைக்கும் சிங்கள அரசு
சிலர் மட்டும் ஆங்கிலேயர்கள் காலத்தில் வேலைக்காக தமிழ்நாட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்கள். இதை சிங்கள அரசு மறைத்து அங்கு வாழும் தமிழர்களின் குடியுரிமையை வழங்க மறுத்து வருகிறது இவ்வாறு வைகோ பேசினார்.

மாறிய வைகோ
வெள்ளை சட்டை, வெள்ளை வேஷ்டி, கறுப்புத் துண்டு என எப்போதும் காணப்படும் வைகோ இந்த நிகழ்ச்சிக்காக கோட் சூட் அணிந்து கல்லூரி பேராசிரியர் போல நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முனைவர் பிரசாத், இணை முதல்வர் கஸ்மீர்ராஜ், துணை முதல்வர் ஜசன்ஜோசப், கல்லூரி மக்கள் தொடர்பு அதிகாரி முனைவர் ஜோசப் செல்வராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications