சென்னை மாநகராட்சிப் பூங்காக்களில் 'சந்தை' வேண்டாம்!- வைகோ
சென்னை: மாநகராட்சி பூங்காக்கள், விளையாட்டு மைதானங்களில் சந்தைகள் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
சென்னை மாநகரம் 375 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த மக்கள்தொகைக் கணக்கின்படி 75 லட்சம் மக்கள் சென்னை மாநகரில் வசிக்கின்றனர். புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள விரிவாக்கப் பகுதிகளைச் சேர்த்தால் மக்கள் தொகை ஒரு கோடியை நெருங்கும்.
இந்தச் சூழலில் மக்கள் ஆரோக்கியமான காற்றைச் சுவாசிக்கவும், நடை பயிலவும், குழந்தைகள் விளையாடவும் பொது பூங்காக்களும், விளையாட்டு மைதானங்களும் பெரிதும் பயன்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை மாநகரில் உள்ள விளையாட்டு மைதானங்களிலும் பொது பூங்காக்களிலும் சந்தைகள் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தைக் கைவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் சூரியபிரகாசம் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்தத் திட்டம் தற்போது ஆலோசனைக் கட்டத்தில் இருப்பதாகவும், பயன்படுத்தப்படாத இடங்களில் சந்தைகளை அமைக்க உத்தேசித்து இருப்பதாகவும், பொதுமக்களின் கருத்துகளை அறிந்து முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்றும் சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூங்காக்களில் சந்தைகள் அமைப்பது என்பது பொதுமக்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான சூழ்நிலையைப் பாதிக்கக் கூடியதாக அமையும்.
எனவே, வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு, மாநகர மக்களின் எதிர்கால நலனை தொலைநோக்கோடு சிந்தித்து இந்தத் திட்டத்தை முற்றாக கைவிட வேண்டும்,' என்று அவர் கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications