வைகுண்டராஜன் வழக்கு: முன்ஜாமின், ரத்து செய்யக்கோரிய மனுக்கள்… ஜனவரியில் விசாரணை
மதுரை: தூத்துக்குடி துறைமுக சபை முன்னாள் தலைவர் சுப்பையா அதிகளவில் சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய சிபிஐக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி வ.உ.சி., துறைமுக பொறுப்புக் கழக தலைவராக இருந்தவர் சுப்பையா. அவரும், குடும்பத்தினரும் வருமானத்திற்கு அதிகமாக 8 கோடியே 23 லட்சத்து 93 ஆயிரத்து 501 ரூபாய் சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ., லஞ்ச ஒழிப்பு போலீசார் 2012ல் வழக்குப் பதிவு செய்தனர்.

சுப்பையாவின் தாய் ஜானகி மற்றும் வைகுண்டராஜன், அவரது சகோதரர் ஜெகதீசன் இடையே வங்கி மூலம் 7.5 கோடி ரூபாய் பண பரிவர்த்தனை நடந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வைகுண்டராஜன், ஜெகதீசன் ஏற்கனவே தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை நவம்பர் 7ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.
இதனிடையே மீண்டும் இருவரும் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை கடந்த 20ஆம் தேதி நீதிபதி ஜி.சொக்கலிங்கம் விசாரித்தார்.
சி.பி.ஐ., சார்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர்.சாமிநாதன் வாதிடுகையில், ''மனுதாரர்கள் செல்வாக்குமிக்கவர்கள். சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளது. இதனால் முன்ஜாமின் மறுக்கப்படுகிறது' என ஏற்கனவே இதே கோர்ட் உத்தரவிட்டது. மீண்டும் இதே கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது ஏற்புடையதல்ல,'' என்றார்.
அப்போது வைகுண்டராஜன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.ஆனந்த், வழக்கில் பல்வேறு ஆவணங்களை சேர்க்க வேண்டியுள்ளது. எனவே விசாரணையை வேறு தேதிக்கு ஒத்திவைக்கவேண்டும் என்று கேட்டார். இதனையடுத்து ஜனவரி முதல்வாரத்திற்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
அதேபோல வழக்கை (எப்.ஐ. ஆர்.,) ரத்து செய்யக் கோரி வைகுண்டராஜன் மனுவை டிசம்பர்22க்கு (இன்று) நீதிபதி ஆர்.மாலா ஒத்திவைத்தார்.
இன்று இந்த வழக்கும் விசாரணைக்கு வந்தது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி மாலா, சிபிஐ பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 8ஆம் தேதி ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications