ஜெயலலிதாவிடம் ஆசி பெற்றார் ஸ்ரீரங்கம் வளர்மதி
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அதிமுகவின் எஸ். வளர்மதி சென்னை வந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற்றார்.
ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி ஜெயலலிதாவை சந்தித்து பேசுவதற்காக கார் மூலம் நேற்று இரவு சென்னை விரைந்தார். போயஸ் கார்டன் இல்லத்திற்குச் சென்ற அவர் அங்கு ஜெயலலிதாவைச் சந்தித்து தான் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ஜெயலலிதாவிடம் வழங்கி ஆசி பெற்றார்.
இது குறித்து அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் எஸ். வளர்மதி நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
இந்த நிகழ்வின் போது, திண்டுக்கல் மாவட்ட செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் பூனாட்சி, அதிமுக மனுக்கள் பரிசீலனைக்குழு உறுப்பினரும், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளருமான ப.குமார் எம்.பி., திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், அரசு தலைமைக் கொறடாவுமான ஆர்.மனோகரன், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேல் எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.