வணக்கம் பரமா, நான் மோடி பேசுகிறேன்: செல்போன் மூலம் வாக்கு சேகரிக்கும் பிரதமர்
சென்னை: செல்போன் மூலம் தமிழக வாக்காளர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் கூறி பிரதமர் மோடியை வாக்கு கேட்க வைத்து மக்களை கவர தமிழக பாஜக திட்டமிட்டுள்ளது.
2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற அது தொழில்நுட்பத்தை கையில் எடுத்ததும் காரணம் ஆகும். இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் தொழில்நுட்பம் வாயிலாக பிரச்சாரம் செய்ய மாநில பாஜக திட்டமிட்டுள்ளது.
இதற்காக மாநில ஊடக பிரிவு பொறுப்பாளர் எஸ்.ஆர். சேகர் தலைமையில் மாபெரும் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு வித்தியாசமாக பிரச்சாரம் செய்ய வியூகங்களை வகுத்துக் கொண்டிருக்கிறது.

வாக்காளர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் கூறி பிரதமர் மோடி செல்போன் வாயிலாக வாக்கு கேட்கும் வகையில் வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட தலைவர்கள் செல்போன் வாயிலாக இது போன்று வாக்கு சேகரித்தனர். மக்களின் செல்போனுக்கு அழைப்பு வரும் எடுத்து பேசினால் தலைவர்களின் குரலில் வாக்கு சேகரிக்கப்படும்.
தற்போது உங்கள் செல்போனுக்கு ஒரு அழைப்பு வரும். எடுத்து ஹலோ சொன்னால் ஹலோ வணக்கம், நான் மோடி பேசுகிறேன். வரும் தேர்தலில் நீங்கள் பாஜகவின் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று மோடியின் குரல் ஒலிக்கும்.
இத்தனை நாட்களாக பொதுவாக வாக்காளர்களிடம் செல்போன் மூலம் வாக்கு சேகரிக்கப்பட்டது. தமிழக சட்டசபை தேர்தலில் வாக்காளர்களின் பெயரை தெரிவித்து வாக்கு சேகரிக்க உள்ளனர்.
அதாவது உங்கள் பெயர் சரவணன் என்றால், உங்கள் போனுக்கு வரும் அழைப்பை ஏற்றால், வணக்கம் சரவணன். நான் பிரதமர் மோடி பேசுகிறேன். வரும் சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று மோடியின் குரல் ஒலிக்கும்.












Click it and Unblock the Notifications