வாக்குச்சாவடி செலவாக ரூ 2,500 தேவை... தேர்தல் ஆணையத்தை கண்டித்து வி.ஏ.ஓ.க்கள் ஆர்ப்பாட்டம்
அரியலூர்: தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து அரியலூர், மயிலாடுதுறை, சீர்காழி, திருத்துறைப்பூண்டி, ஓமலூர் ஆகிய இடங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கு கடந்த மாதம் 24ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. வாக்குச்சாவடி பணிகளில் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில் தேர்தல் பணிப் படியை அன்றே தேர்தல் ஆணையம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, இதைக் கண்டித்தும், வாக்குச்சாவடி செலவினங்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க வலியுறுத்தியும் அரியலூர், சீர்காழி, மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி, ஓமலூர் ஆகிய இடங்களில் கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களிலும், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலும், நாகை மாவட்டம் மயிலாடுதுறையிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் அதிகமான கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.
சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.