வர்தா புயல் எதிரொலி… பலத்த காற்று வீசும் .. 2 நாட்களுக்கு வட மாவட்டங்களில் கனமழை.. இன்று இரவு முதல்!
வர்தா புயல் நாளை கரையை கடக்க உள்ளதால் 2 நாட்களுக்கு வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: வர்தா புயல் நாளை தெற்கு ஆந்திரா மற்றும் சென்னைக்கு இடையே கரையை கடக்க உள்ளது. இதனால் 2 நாட்களுக்கு வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் பலத்த காற்று வீசக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து 450 கிமீ தொலைவில் வர்தா புயல் மையம் கொண்டிருப்பதாகவும், இதனால் ஆந்திர வடகடலோர பகுதிகளில் 36 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

மேலும், தெற்கு ஆந்திரா மற்றும் சென்னை அருகே வர்தா புயல் கரையை கடக்க உள்ளதால், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தில் மழை பெய்யும் எனவும் வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் வட தமிழக கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்ற எச்சரிக்கையையும் அவர் விடுத்துள்ளார். இதுமட்டுமல்லாமல் 2 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் பாலச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.
வர்தா புயல் கரையை கடக்கும் போது 70 கிமீ முதல் 80 கிமீ வரை காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அண்மையில் தமிழ்நாட்டிற்கு வந்த நாடா புயல் அமைதியாக, எந்த வித சேதாரமும் இன்றி கரையை கடந்து விட்டது. இந்நிலையில் புதிதாக உருவாகியுள்ள வர்தா புயலால் பாதிப்பு இருக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications