வாசன் கட்சியை உடனே உயரத்துக் கொண்டு போவது எப்படி?.. பலூன் தான்!
சென்னை: பட்டம் பற.. பற.. என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படத்து பாடலைபோல இப்போது பலூன் பற..பற.. என்று பாடிக்கொண்டுள்ளனர் வாசன் கட்சியினர்.
காங்கிரசில் இருந்து பிரிந்து வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் நேற்று தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். திருச்சியில் வரும் 28ம் தேதி கட்சி அறிமுக மாநாடு நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.
வாசன் கட்சியை பிரபலப்படுத்த பிரபல வியாபார நிறுவனங்களின் விளம்பர யுத்தியை கையில் எடுத்துள்ளனர் அக்கட்சியினர். அதாவது பலூன் மூலம் விளம்பரம் செய்வது. பலதரப்பு மக்களும் புழங்கும் கிண்டியில் பலூன் விளம்பரம் அமர்க்களப்படுகிறது.
வாசன் முகம் பொறிக்கப்பட்ட பிரமாண்ட பலூன்கள் அங்கு பறக்கவிடப்பட்டுள்ளன. அந்த பலூனில் பெருந்தலைவர் காமராஜர், மூப்பனார் ஆகியோர் படங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இதனால் சிக்னலில் நிற்போர், வேலைக்கு செல்வோர், கல்லூரி மாணவ, மாணவிகள் என பலதரப்பட்ட மக்களையும் இந்த விளம்பரம் ஈர்த்துள்ளது.
திருச்சி மாநாடு நடைபெறும் வரை பலூன் பற..பற.. என்று பலூனை பார்த்து பாடிக்கொண்டிருக்கபோகின்றனர் கட்சி நிர்வாகிகள்.