தமாகா மாநில துணைத்தலைவர் ஞானசேகரன் நீக்கம் - ஜி.கே. வாசன் !
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவராக பொறுப்பு வகித்து வந்த ஞானசேகரன் மற்றும் வேலுார் மாவட்ட தலைவர் சீனிவாச காந்தியையும் அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்து விடுவிப்பதாக அக்கட்சியின் தலைவர் வாசன் அறிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தியது தமிழ் மாநில காங்கிரஸ். ஆனால் தமாகா கேட்ட தொகுதிகளைத் தருகிறோம்; இரட்டை இலை சின்னத்தில் நிற்க வேண்டும் என நிபந்தனை விதித்தது அதிமுக.
இதை ஏற்காமல் திடீரென மக்கள் நலக் கூட்டணி- தேமுதிக அணியில் தமாகா இணைந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் காஞ்சிபுரம் எம்.பி. விஸ்வநாதன் ஆகியோர் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே திரும்பினார். மற்றொரு மூத்த தலைவரான எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், அதிமுகவுக்கு தாவிவிட்டார்.
இதையடுத்து நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி- தேமுதிக- தமாகா அணி படுதோல்வியைச் சந்தித்தது. தாமாக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் டெபாசிட் பறிகொடுத்தது. இந்த தோல்வி தமாகாவின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கிவிட்டது. இதனால் தமாகாவில் உட்கட்சி குழப்பம் அதிகரித்து வந்த நிலையில், கட்சியின் மாநில துணைத்தலைவர் ஞானசேகரன் நாளை அதிமுகவில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில் தமாகா மாநில துணைத்தலைவராக பொறுப்பு வகித்து வந்த ஞானசேகரன் மற்றும் வேலூர் மாவட்ட தலைவர் சீனிவாச காந்தி ஆகியோர்களை கட்சி பொறுப்பிலிருந்து நீக்குவதாக அக்கட்சியின் தலைவர் வாசன் அறிவித்துள்ளார்.