"த.மா.கா' வை ஜி.கே.வாசனுக்கு 'தாரை வார்த்து' கொடுத்த புதுச்சேரி குப்புசாமி!
சென்னை: காங்கிரஸுடன் ஜி.கே. மூப்பனார் ஐக்கியமான உடன் கைவிடப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியைப் பெயரை இதுநாள் வரை பாதுகாத்து வந்தவர் புதுச்சேரி குப்புசாமி. இவர்தான் தற்போது ஜி.கே.வாசன் கட்சிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் பெயரை தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து தனிக் கட்சி ஆரம்பிக்கும் முடிவை ஜி.கே. வசான் அறிவித்த உடன் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயர் கட்சிக்கு மீண்டும் கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது.

ஏனெனில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை வாசன் 2002-ம் ஆண்டு காங்கிரசுடன் இணைத்த பின்னர் அந்த பெயரை புதுக்சேரியை சேர்ந்த குப்புசாமி என்பவர் தேர்தல் ஆணையத்திடம் பெற்று தொடர்ந்து புதுப்பித்து வந்தார். இதனால் மீண்டும் அந்த பெயர் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது.
இந்த நிலையில் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் பெயர் கிடைத்தால் அது தனது முதல் வெற்றியாக அமையும் என கருதிய வாசன் அதற்கான தீவிர முயற்சியில் இறங்கினார். தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயரே மீண்டும் கிடைக்க என்ன வாய்ப்புகள் உள்ளன என தேர்தல் ஆணையத்தில் உள்ள அதிகாரிகளிடம் வாசன் கேட்டுள்ளார்.
இதையடுத்து வாசனுக்கு நெருக்கமான சில டெல்லி அரசு அதிகாரிகள் மூலம் இதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன. ஜி.கே.மூப்பனார் மறைவிற்கு பின்னர் த.மா.கா.வை காங்கிரசுடன் இணைத்த போது கட்சியை கலைப்பதாக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை வாசன் தேர்தல் ஆணையத்திடம் வழங்கினார்.
ஆனால் கட்சியை கலைக்க வேண்டும் என்றால் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்துடன் கடிதம் தர வேண்டும் என அப்போது தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. ஆனால் அந்த கடிதத்தை வாசன் அளிக்கவில்லை.
இதனால் த.மா.கா. என்ற கட்சி முறைப்படி கலைக்கப்படாமல் இருந்து வந்ததது. இதனால் அந்த பெயரை புதுச்சேரியை சேர்ந்த குப்புசாமி தொடர்ந்து புதுப்பித்து வந்தார். எனவே அவர் அனுமதித்தால் த.மா.கா. என்ற பெயர் மீண்டும் கிடைப்பதில் சிக்கல் இல்லை என வாசனுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வாசன் ஆதரவு தலைவர் ஒருவர் மூலம் புதுச்சேரி குப்புசாமியிடம் பேசப்பட்டது. அவரும் கட்சியின் பதிவு உரிமையை முழுமையாக வாசனுக்கு அளிக்க முன்வந்தார். இதற்கான அனுமதி கடிதத்தையும் குப்புசாமி தேர்தல் ஆணையத்திடம் அளித்தார்.
இதனால் எந்த சிக்கலும் இல்லாமல் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் திருச்சியில் நேற்று உதயமானது. கட்சிக்கு மீண்டும் த.மா.கா. பெயர் கிடைத்தது வாசனுக்கு கிடைத்த முதல் வெற்றி என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். அவர்களுக்கு மேலும் மகிழ்ச்சி தரும் வகையில் மீண்டும் கட்சிக்கு சைக்கிள் சின்னம் கிடைக்கும் என திருச்சி கூட்டத்தில் வாசன் அறிவித்தார்.
இனியாவது த.மா.கா. பெயரை வாசன் 'தொடர்ந்து' புதுப்பிக்கட்டும்!












Click it and Unblock the Notifications