ரஜினி யதார்த்தமான மனிதர்... சொல்கிறார் ஜி.கே.வாசன்
ரஜினிகாந்த் யதார்த்தமான மனிதர் என்றும் இளைஞர்கள் மது, புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும் என்று அவர் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்றும் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
திருச்சி: நடிகர் ரஜினிகாந்த யதார்த்தமான மனிதர் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இன்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தியுள்ளது. அந்நிய நேரடி முதலீடு விவகாரத்தில் சட்டத்திற்கு உட்பட்டு சோதனை நடத்தப்பட்டதாக அத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடந்ததாக கூறுகிறார்கள். எனவே சட்டம் கடமையை செய்தாலும் அதன் உண்மை நிலையை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும்.
1996 தேர்தலில் அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டது விபத்து என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து. ரஜினியை நட்பு அடிப்படையில் பலர் சந்திக்கலாம். அவர் மீது மரியாதை செலுத்துபவர்கள் சந்திக்கலாம். இவை அனைத்தையும் ரஜினி புரிந்திருப்பார்.
என்னால் அரசியல் கட்சியினர் லாபம் அடைந்தனர் என்று கூறியிருப்பது, அவர் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. அவர் யதார்த்தமான மனிதர். உண்மையான மனிதர். இளைஞர்கள் மது, புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும் என்று அவர் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.
சட்டசபைத் தேர்தலில் கூட்டணிதான் வெற்றியை தீர்மானிக்கும். யாரும் இனி தனிப்பட்ட முறையில் ஆட்சி செய்ய முடியாது. உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். அதிகாரிகள் ஆட்சி செய்வதை மக்கள் விரும்பமாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications