கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்த வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை
சென்னை: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை நேரில் சந்திக்கும்போது, கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா சந்திப்பின் மூலம் தமிழகத்தில் நிலுவையில் உள்ள பல்வேறு பிரச்னைகளுக்கு நிரந்தர, சுமுகத் தீர்வு எட்டப்பட வேண்டும்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், நிதிநீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை உடனடியாக அமைத்து காவிரி பிரச்னையைத் தீர்க்க வலியுறுத்த வேண்டும்.
விவசாயிகள், மாணவர்கள் கல்விக் கடனைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்த வேண்டும். கச்சத்தீவில் மீனவர்களின் மீன்பிடி உரிமையை நிலைநாட்டும் வகையில் கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய அழுத்தம் தர வேண்டும் என்று வாசன் கூறியுள்ளார்.