பாமக வேட்பாளரை கொல்ல முயன்ற விடுதலை சிறுத்தைகள்: ராமதாஸ் குற்றச்சாட்டு
சென்னை: அரூர் தொகுதி பாமக வேட்பாளரை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் விடுதலை சிறுத்தைகள் என கூறப்படுகிறது எனவும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தருமபுரி மாவட்டம் அரூர் சட்டப்பேரவைத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கரை படுகொலை செய்யும் நோக்குடன் தாக்குதல் நடத்த வன்முறை கும்பல் முயற்சி செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தேர்தலை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளாமல் இத்தகைய வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

அரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக போட்டியிடும் முரளி சங்கர் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களாகவே அவரை செல்பேசியில் தொடர்பு கொண்ட சிலர், அரூர் தொகுதியில் பா.ம.க.வுக்கு ஆதரவளிப்பதாகவும், அதற்காக தங்களுக்கு பணம் தர வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர். அதே கும்பலைச் சேர்ந்தவர்கள் நேற்று முன்நாள் இரவு முரளி சங்கர் வீட்டுக்கு சென்றுள்ளனர். அவர்களின் செயல்கள் ஐயமளிக்கும் வகையில் இருந்ததை கண்ட முரளி சங்கரின் தந்தை, அவர்களை அழைத்து விசாரித்திருக்கிறார். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அரூர் பேரூந்து நிலையம் அருகில் பிரச்சாரத்தைத் தொடங்கிய முரளிசங்கர், நேற்றிரவு 10 மணிக்கு சந்தைமேடு என்ற இடத்தில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். அந்த நேரத்தில் வாகனத்தில் வந்த சிலர் வேட்பாளரையும், அவருடன் வந்தவர்களையும் சுற்றி வளைத்துள்ளனர். வேட்பாளர் முரளி சங்கரின் உறவினரான மதி என்பவர் மீது அந்தக் கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்த முயன்றபோது, வேட்பாளர் முரளிசங்கரும், அவருடன் வந்தவர்களும் எச்சரித்ததால் மதி விலகி நின்று உயிர் தப்பினார். இதையடுத்து தாக்குதல் நடத்த வந்தவர்களை அங்கிருந்த பா.ம.க.வினர் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். சந்திர சேகர், மருதுபாண்டி ஆகிய இருவர் மட்டும் பிடிபட்ட நிலையில், வாகனத்தில் வந்த மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
அரூர் தொகுதி வேட்பாளர் முரளி சங்கரை படுகொலை செய்யும் நோக்கத்துடனேயே இத்தாக்குதல் முயற்சி நடைபெற்றுள்ளது. வேட்பாளருடன் வந்த பா.ம.க. தொண்டர்களும், வேட்பாளரின் காவலுக்கு வந்த காவலரும் அக்கும்பலை மடக்கிப் பிடித்திருக்காவிட்டால், வேட்பாளர் முரளிசங்கரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கக்கூடும். தாக்குதல் நடத்தியவர்கள் விடுதலை சிறுத்தைகள் என கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் முயற்சி தொடர்பாக பிடிபட்ட இருவர் தவிர மற்றவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர்கள் அனைவரையும் காவல்துறை விரைந்து கைது செய்ய வேண்டும். இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதையும் காவல்துறை கண்டு பிடித்து கைது செய்வதுடன், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications