ஆர்.கே.நகர் வேட்பாளரை இன்று அறிவிக்கிறார் திருமா... தானே களமிறங்க திட்டம்?
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என அக்கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதில், சென்னை ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து களமிறங்கும் வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த தேர்தல்களில் திமுக - அதிமுக என மாறி மாறி கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து வந்தது விடுதலை சிறுத்தைகள் கட்சி. இதனால், 25 ஆண்டுகளாகியும் கட்சியை வளர்க்க இயலாமல் மற்றவர்களைச் சார்ந்தேயிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில், இம்முறை மாற்றத்தை வேண்டி, கூட்டணி ஆட்சி என்ற கோஷத்தை எழுப்பினார் திருமா. பின்னர் அதன் தொடர்ச்சியாக மக்கள் நலக்கூட்டணி உருவானது. அந்தக் கூட்டணியில் தேமுதிகவும், தமாகாவும் சேர்ந்ததன் மூலம் மேலும், அக்கூட்டணி வலுப்பெற்றுள்ளதாக அதன் தலைவர்கள் கருதுகின்றனர்.
முன்னெப்போதும் இல்லாத அளவு தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியில் அதிக தொகுதிகளைப் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, தொகுதிப் பங்கீட்டின் போது, முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியை கேட்டுப் பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால், அத்தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து திருமாவளவனே போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியானது. இவ்வாறு முதல்வரை எதிர்த்து போட்டியிடுவதன் மூலம் வெற்றியோ - தோல்வியோ, தமிழகத்தின் ஒட்டுமொத்த பார்வையும் தன் மீது திரும்பும் என்று திருமாவளவன் கருதுவதாகத் தெரிகிறது. அதோடு, தங்களது கட்சி மீதான பிம்பமும் மாறும் என்பது அவரது கருத்து எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் இடம் பெறவில்லை. 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மட்டும் திருமாவளவன் முதல் கட்டமாக அறிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக இன்று இரண்டாவது வேட்பாளர் பட்டியலை விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியிடுகிறது. அதில், ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவிற்கு எதிராக களமிறங்கும் வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, திருமாவளவனை காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடச் சொல்லி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் வலியுறுத்தி வருவதாகத் தெரிகிறது. இதனால், ஜெயலலிதாவை எதிர்த்து திருமாவளவன் ஆர்.கே.நகரில் களமிறங்குவாரா அல்லது காட்டுமன்னார்கோவிலில் போட்டியிடுவாரா என்பது குறித்து இன்று தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications