ராம்குமார் மர்ம மரணம்… சிபிஐ விசாரணை கோரி விடுதலை சிறுத்தைகள் போராட்டம்!
சென்னை: ராம்குமார் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
புழல் சிறையில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானதில் இருந்தே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அக்கட்சியின் தலைவர் திருமாவளவனும் ராம்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அதுகுறித்து நீதி விசாரணை செய்யப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்தப் பிரச்சனையில் திருமாவளவன் இறங்கிய பின்னர்தான் ராம்குமார் மரணம் குறித்த சர்ச்சைக்கு சற்று கூடுதல் அழுத்தம் கிடைத்துள்ளது.
இந்நிலையில், ராம்குமாரின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி அவரது உடல் இருக்கும் ராயப்பேட்டை மருத்துவமனை முன்பு தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.