ஜெ.வீட்டின் வாரிசுகளுக்கு சட்டப்படி இழப்பீடு தரப்படும் - அமைச்சர் சி. வி. சண்முகம்
வேதா நிலைய இல்லத்திற்கு சொந்தம் கொண்டாடும் உறவினர்களுக்கு சட்டரீதியாக இழப்பீடு வழங்கப்படும் என்று சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடான வேதா நிலையத்திற்காக சட்டப்படி வாரிசாக உள்ளவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
அதேபோல ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்தோட்ட இல்லமான வேதா நிலையத்தினை நினைவிடமாக மாற்றப்படும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
முதல்வரின் இந்த அறிவிப்புக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
தீபாவின் சகோதரரும், ஜெயலலிதாவின் அண்ணன் மகனுமாகிய தீபக் அரசின் முடிவை வரவேற்று உள்ளார். மேலும் அரசின் முடிவை தான் வரவேற்பதாகவும் தெரிவித்தார். அதே நேரத்தில் சட்டப்படி வாரிசுகளாக உள்ள தங்களை கேட்காமல் நினைவில்லமாக மாற்றக்கூடாது என்றும் தெரிவித்தார்.
இதனிடையே சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ஜெயலலிதாவின் வேதா நிலையம் வீட்டிற்க சொந்தம் கொண்டாடும் உறவினர்களுக்கு சட்டரீதியாக இழப்பீடு வழங்கப்படும் என்றார். உறவினர்களுக்கு இழப்பீடு தந்த பின்னர் வேதா நிலையம் நினைவிடம் ஆக்கப்படும் என்றும் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.