சாதி இடஒதுக்கீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க சொல்வதா?: ஜனார்த்தன் திவேதிக்கு வீரமணி கண்டனம்

Subscribe to Oneindia Tamil

k veeramani
சென்னை: சாதி ரீதியான இடஒதுக்கீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜனார்த்தன் திவேதி கூறியுள்ளதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:

காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர்களில் ஒருவரான ஜனார்த்தன திவேதி என்பவர் ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியிலும், மற்ற கட்சிகளில் உள்ளது போன்று சமூகநீதிக்கு எதிரானவர்கள், உயர்ஜாதியினர் பலர் இன்னமும் உள்ளனர் என்பதற்கு இவரது அரைவேக்காட்டுத்தனமான யோசனை, ஆபத்தானதும், அரசியல் சட்ட அடிப்படை உரிமைக்கும் கூட முற்றிலும் எதிரானதாகும்.

‘ஜாதி' என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் இடம் பெற்றுள்ளதோடு, இன்னமும் 'ஜாதிப் பஞ்சாயத்து' என்று காட்டுமிராண்டித்தன, தான்தோன்றித்தனமான பஞ்சாயத்துக்கள் வடபுலத்திலும், நாடு முழுவதிலும் மலிந்துள்ள நிலையில், இதை எப்படி ஒழிப்பார்?

அரசமைப்புச் சட்டத்தில் உள்ள வார்த்தைகளான ‘சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும்' ‘Socially and educationally' என்ற சொற்றொடருக்கு எடுத்துக்காட்டு, மனுதர்ம, வருணதர்ம ஜாதி அமைப்புக் காரணமான பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கல்வி வாய்ப்புகள், மற்ற பெரும்பாலோரான உடலுழைப்பு 'கீழ்ஜாதிக்காரர்களுக்கு', 'சூத்திர, பஞ்சமர்'களுக்கு மறுக்கப்பட்டதால்தான் மலைவாழ், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட (S.C., S.T., O.B.C., M.B.C.) முதலியவர்களுக்கான பிரிவுகள் அடிப்படையில் இடஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதுவெறும் ஜாதி அடிப்படை மட்டுமே அல்ல, ‘ஜாதி' என்பது மேற்சொன்ன கல்வி, சமூக ரீதியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட ஏகலைவன் கூட்டத்தினரை மற்றவர்களோடு சமப்படுத்தச் செய்ய துவக்கப்பட்ட ஓர் ஏற்பாடு. 5 ஆயிரம் ஆண்டுகால அநீதிக்கு, கடந்த 50, 60 ஆண்டுகால இடஒதுக்கீடு உடனே பரிகாரத்தைத் தேடித் தந்துவிடாது.

அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் தொடங்கி, மற்ற பல்வேறு பிரிவுகளிலும் 'சமூகநீதி'யை அளிக்கவே இடஒதுக்கீடு.

பொருளாதார அடிப்படை என்பது இந்திரா, சகானி வழக்கு உள்பட பல தீர்ப்புகளில், அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை என்று செல்லாததாக்கப்பட்டு, தீர்ப்பும் அளிக்கப்பட்டது. இது இருவேதம் படித்த பெயர் தாங்கியான இவருக்குத் தெரியாதோ.

காங்கிரஸ், வரும் தேர்தலில் தோற்கடிக்கப்பட, இத்தகைய நபர்கள் எதிர்க்கட்சிகளுக்கு மறைமுகமாகப் பணியாற்றுகிறார்கள் போலும். இத்தகையவர்களின் நாவை அடக்கும்படி செய்ய காங்கிரஸ் தலைமை முன்வரவேண்டும். இல்லையேல் காங்கிரசின் தோல்வி கற்பாறையில் செதுக்கப்பட்டதாக ஆகிவிடும் என எச்சரிக்கிறேன்

இவ்வாறு வீரமணி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+