யானை தந்தம் கடத்தல் வழக்கு: 18 ஆண்டுகள் கழித்து வீரப்பனுக்கு விடுதலை!
யானை தந்தம் கடத்திய வழக்கில் இருந்து 18 ஆண்டுகளுக்குப் பிறகு வீரப்பனுக்கு விடுதலை அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Recommended Video
சத்தியமங்கலம் : யானை தந்தம் கடத்தியதாக சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் சந்தனக் கடத்தல் வீரப்பன் உட்பட 6 பேரை விடுதலை செய்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கொண்டப்பநாயக்கன் பாளையம் வனப்பகுதியில் பில்பாளி என்கிற இடத்தில், துப்பாக்கிகள் மூலம் காட்டுயானைகளைக் கொன்று, தந்தங்களை கடத்தியதாக கடந்த 2000ம் ஆண்டில் 5 பேரை அதிரடிப்படையினர் பிடித்தனர்.
இவர்கள் 5 பேரும் சத்தியமங்கலம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட கோவிந்தராஜ், ஆறுமுகம், சண்முகம், ஜவஹர்,ராஜேந்திரன் உட்பட இந்தக் கடத்தலில் தொடர்புடைய பிரபல சந்தனக்கடத்தல் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளி சந்திரகவுடா ஆகிய 7 பேர் மீது வனத்துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய வீரப்பன், சந்திரகவுடா, கோவிந்தராஜ் ஆகிய 3 பேர் இறந்துவிட்ட நிலையில், நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது .
அந்த தீர்ப்பில், வனத்துறையினர் தகுந்த ஆதாரங்களுடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றத்தை நிரூபிக்கத் தவறியதால் ஆறுமுகம் தவிர மற்ற 6 பேரையும் விடுதலை செய்வதாகக் கூறி நீதிபதி குமாரசிவம் தீர்ப்பளித்தார்.