செம்மரக்கடத்தல் தகராறு... கரகாட்ட மோகனாம்பாளின் அக்காள் மகன் கடத்தி படுகொலை
செம்மர கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேலூர் கரகாட்ட மோகனாம்பாளின் அக்காள் மகன் சரவணன் மர்மநபர்களால் கடத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வேலூர்: செம்மரக் கடத்தல் வழக்கில் ஜாமீனில் வெளியே வந்திருந்த கரகாட்டக் கலைஞர் மோகனாம்பாளின் அக்காள் மகன் சரவணன் மர்மநபர்களால் கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செம்மரக்கடத்தல் தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
வேலூர் ஒல்டு டவுன் பகுதியை சேர்ந்த கரகாட்டக்கலைஞர் மோகனாம்பாள். செம்மரக்கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த இவர், கடந்த 2014ம் ஆண்டு வேலூர் கோர்ட்டில் சரணடைந்தார்.
60 வயதான மோகனாம்பாளின் வீட்டில் நடந்த சோதனையில் ரூ. 4.4. கோடி பணமும், 72 பவுன் தங்க நகைகளும் சிக்கின. இதன் மூலம் மோகனாம்பாள் செம்மரக் கடத்தல் தொழிலில் கொடி கட்டிப் பறந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இதன் பிறகுதான் செம்மரக் கடத்தல் தொடர்பான பரபரப்பும் கூடியது. பல கோடி ரூபாய் பணம் இதில் புழங்குவதும் தெரிய வந்தது.
செம்மரக் கடத்தலில் மோகனாம்பாளுக்கு சகோதரி மற்றும் அவரது மகன் சரவணன் உள்ளிட்டோர் உதவியாக இருந்ததும் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சரவணனை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த சரவணன் வசந்தபுரத்தில் தனது மனைவியுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், சரவணனின் மனைவி நேற்று சரவணனின் மனைவி வேலூர் தெற்கு போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், 'தனது கணவரை நேற்றிரவு ஒரு கும்பல் கடத்திச் சென்று விட்டதாகவும், அவரைக் கண்டுபிடித்து தரும்படியும்' அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மர்மநபர்கள் சிலர் சரவணனை ஓல்டு டவுன் மலையை நோக்கி கடத்திச் சென்றது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் சரவணனின் சடலம் மீட்கப்பட்டது. அவரை கடத்தி சென்ற கும்பல் மலைப்பகுதியில் படுகொலை செய்து வீசிச்சென்றதாகக் கூறப்படுகிறது.
செம்மர கடத்தலில் தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த கொலை சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.