தமிழ்த்தாய் முன்பு விஜயேந்திரர் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்... வேல்முருகன் போர்க்கொடி!
தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காத விஜயேந்திரர் தமிழ்த்தாய் முன்பு மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
Recommended Video

சென்னை : தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காத விஜயேந்திரர் தமிழ்த்தாய் முன்பு மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். மேலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிற்பது மரபல்ல என்பது ஆணவத்தின் வெளிப்பாடு என்றும் மன்னிப்பு கேட்காவிட்டால் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டங்கள் அறிவிக்கப்படும் என்றும் வேல்முருகன் எச்சரித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழ் - சமஸ்கிருத அகராதி வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் முதலில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது விஜயேந்திரர் எழுந்து நின்றார். தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது விஜயேந்திரர் அமர்ந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்பது மரபல்ல, அப்போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்ததாக சங்கர மடம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால் விஜயேந்திரரின் இந்த செயல் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேல்முருகன் கண்டனப் பதிவு
இந்நிலையில் விஜயேந்திரரின் செயலுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அவர் கூறியுள்ளதாவது : கவிஞர் வைரமுத்து சொல்லியது போல தேசிய கீதம் என்பது தாய்நாட்டை மதிப்பது தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தாய்மொழியை மதிப்பது இரண்டும் சம அளவில் மதிக்கப்படவேண்டியவை. தமிழ் மொழி தாய் மொழி அந்த மொழியை போற்றுகின்ற பாடலை பாடும் போது எழுந்து நிற்பது மரபல்ல என்று சொல்வது கண்டனத்திற்குரியது.

ஆணவம் தவிர வேறெதுவுமில்லை
இதை ஏற்றுக்கொள்ள முடியாது, இது ஆணவத்தின் வெளிப்பாடே. ஒரு வேளை வயதில் மூத்தவர் பெரிய காஞ்சி சங்கராச்சாரியாராக இருந்தால் கூட வயோதிகம் காரணம் சொல்லலாம். ஆனால் தேசிய கீதத்திற்கு எழுந்து நின்றுவிட்டு, தமிழ்த்தாய் வாழ்த்தின் போது தியானம் செய்தேன் என்று சொல்வதெல்லாம் ஆணவத்தின் வெளிப்பாடன்றி வேறொன்றுமில்லை.

விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும்
இளம் மடாதிபதியான விஜயேந்திரர் இனி வரும் காலங்களில் இது போன்று எந்த மேடைகளிலும் நடந்து கொள்ளக் கூடாது. இந்த செயலுக்கு தமிழ்த்தாய் முன்பும், தமிழறிஞர்கள் முன்பும் விஜயேந்திரர் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்.

போராட்ட களமிறங்குவோம்
இனி இதுபோன்றதொரு செயல் நடக்காது என்று கண்டிப்பாக விஜயேந்திரர் மன்னிப்பு கேட்டு உறுதியளிக்க வேண்டும். விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க தவறும் பட்சத்தில் தன்னுடைய கோட்பாடு சரியென்ற நிலைப்பாட்டிலேயே அவர்கள் இருந்தார்கள் என்றால் நிச்சயம் போராட்டம் வெடிக்கும் என்று வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications