பன்மைத்துவத்தின் நல் அடையாளமாகத் திகழும் கருணாநிதி.. வேல்முருகன் புகழாரம்!
வைர விழா காணும் திமுக தலைவர் கருணாநிதிக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: வைர விழா காணும் திமுக தலைவர் கருணாநிதிக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பன்மைத்துவத்தின் நல் அடையாளமாகத் திகழ்வதாகவும் கருணாநிதிக்கு வேல்முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி எம்எல்ஏவாக சட்டசபையில் அடியெடுத்து வைத்து 60 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை வைரவிழாவாக அவரது 94வது பிறந்த நாளான நாளை திமுக கொண்டாடுகிறது.
கருணாநிதியின் வைர விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ திடலில் நாளை மாலை நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, லாலு பிரசாத் யாதவ், சரத்பவர், ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர்.

அரசியல் தலைவர்கள் வாழ்த்து
வைரவிழா காணும் கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர். இந்நிலையில் வைரவிழா நாயகரான கருணாநிதிக்கு தமிழக வாழ்வுரிமைக்கட்சித் தலைவர் வேல்முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
பன்மைத்துவத்தின் நல் அடையாளமாகத் திகழும் தமிழ்நாடு சட்டப்பேரவை வைரவிழா நாயகர் கருணாநிதியை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வாழ்த்துகிறது! போற்றுகிறது!! திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டராகத் தொடங்கி, அதன் தலைவராக, தமிழ்நாட்டின் முதல்வராக, இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவராகவே உயர்ந்து நிற்பவர்தான் மு.கருணாநிதி.

கலை மற்றும் இலக்கியம்
தொடர்ந்து பதிமூன்றாவது முறையாக தமிழ்நாடு சட்டசபை உறுப்பினராகத் தேர்வாகி இன்று தொண்ணூற்று நான்கு அகவையில் வைரவிழா காணுகிறார். இந்தத் தமிழ் நாயகர்! அரசியலில் முத்திரை பதித்தது போலவே கலை மற்றும் இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் அழுத்தமாகத் தடம் பதித்திருப்பவர் கருணாநிதி.

பன்மைத்துவத்தின் நல் அடையாளம்
பன்மைத்துவத்தின் நல் அடையாளமாகத் திகழும் தமிழ்நாடு சட்டசபை வைரவிழா நாயகர் கருணாநிதியை அவரது பிறந்த நாளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வாழ்த்துகிறோம்! போற்றுகிறோம்!! இவ்வாறு வேல்முருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications