நாட்டிலேயே சிறந்த மாநிலம் தமிழகம்தான்! - மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு
சென்னை: நாட்டிலேயே சிறப்பாக செயல்படும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பாராட்டுத் தெரிவித்தார்.
சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் மத்திய அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு கூடுதல் கூடுதல் அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு கலந்துகொண்டு புதிய அலுவலக கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் அவர் பேசுகையில், " மத்திய, மாநில அரசுகள் இணைந்து நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும். பிரதமர் மோடி இந்த ஒற்றுமையை பெரிதும் வலியுறுத்தி வருகிறார்.
அதேபோல், பல்வேறு மாநிலங்களாக இருந்தாலும் ஒரே நாடு - ஒரே மக்கள் எனும் கொள்கையில் செயல்பட மாநில ஒருங்கிணைப்பு அவசியம். வறுமை, தீவிரவாதம் உள்ளிட்ட சவால்களை உறுதியுடன் எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம். அந்த வகையில் நாட்டிலேயே சிறப்பாக செயல்படும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
சாஸ்திரி பவனில் ரூ.54.43 கோடியில் கட்டடப்படும் புதிய கட்டடம் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன கட்டடமாக செயல்படும். மேலும், வாடகை கட்டடங்களில் இயங்கிவரும் அலுவலகங்கள், மார்ச் 2018 முதல் சாஸ்திரி பவனில் கட்டடப்படும் புதிய கட்டடத்தில் இயங்கும்.
சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் உதகை, கன்னியாகுமரி, மதுரைக்கு அடுத்தப்படியாக ராமேசுவரத்தில் விடுமுறை இல்லம் (ஹாலிடே ஹவுஸ்) அமைக்கப்பட உள்ளது. அதேபோல், ரூ.1,000 கோடிக்கு மேலான திட்ட பணிகள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன.
அதன்படி, திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம், சென்னையில் ஐஐடி உணவகம், இளைஞர் வளாகம், திருச்சியில் தேசிய மேலாண்மை நிறுவனம், காரைக்கால் தேசிய தொழில்நுட்ப நிறுவனம், விருதுநகர், பெரம்பலூரில் கேந்திரிய வித்யாலயா, கோவை, சென்னையில் பிஎஸ்எஃப் உள்ளிட்ட இடங்களில் மத்திய பொதுப்பணித் துறை திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அதேபோல், ரூ. 500 கோடிக்கு மேல் சென்னையில் வெள்ளத்தடுப்பு, மீட்பு திட்டங்கள், அண்ணாநகர், நுங்கம்பாக்கம் வருமான வரி அலுவலகம், குடியிருப்புகள் மற்றும் யுனானி, சித்தா மருத்துவமனை ஆராய்ச்சி கட்டடங்கள், உள்விளையாட்டரங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன," என்றார் வெங்கய்ய நாயுடு.