26 வயதில் பறிபோனது விக்னேஷின் உயிர்.. அலறித் துடிக்கும் பெற்றோர், சகோதரி! #vignesh
சென்னை: 26 வயதேயான விக்னேஷை தீக்குப் பறி கொடுத்து விட்டு பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர் அவரது பெற்றோரும், சகோதரியும். கதறித் துடிக்கும் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல யாரிடமும் வார்த்தைகள் இல்லை.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கோபாலசமுத்திரம் மேலவீதியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் ஒரு விவசாயி. இவரது மனைவி கண்ணகி. வீட்டில் தையல் செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இவர்களது மகன்தான் விக்னேஷ். விக்னேஷுக்கு ஜனனி என்ற மூத்த சகோதரி உள்ளார். இவருக்குத் திருமணமாகி விட்டது.
மன்னார்குடியில் பள்ளிப் படிப்பை முடித்த விக்னேஷ் பின்னர் நாமக்கல் சுரபி பாலிடெக்னிக்கில் டிஎம்இ படித்தார். அதன் பின்னர் சென்னைக்கு வந்த அவர் டிஎஸ் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தார்.
மெக்கானிக்
அதன் பின்னர் அம்பத்தூர் டிஐ சைக்கிள் நிறுவனத்தில் மெக்கானிக்காக சேர்ந்தார். கடந்த ஒறு வருடமாக அங்கு வேலை பார்த்து வந்தார். படிப்பை முடித்ததுமே அவருக்கு நாம் தமிழர் கட்சியில் ஈடுபாடு ஏற்பட்டு அதில் இணைந்தார்.
நாம் தமிழர் கட்சி
கடந்த ஒன்றரை வருடமாக நாம் தமிழர் கட்சியில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். பல போராட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளார். திருவாரூர் மாவட்ட மாணவர் பாசறை செயலாளராகவும் இருந்து வந்துள்ளார்.
சென்னை போராட்டத்தில் விபரீதம்
இந்த நிலையில்தான் நேற்று நடந்த கர்நாடகத்திற்கு எதிரான நாம் தமிழர் கட்சியின் போராட்டத்தின்போது தீவைத்துக் கொண்டார். படுகாயமடைந்த அவர் உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு 95 சதவீத தீக்காயம் ஏற்பட்டிருப்பதால் உயிர் பிழைப்பது கடினம் என்று டாக்டர்கள் கூறி விட்டனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அவரது மரணச் செய்தி வந்துள்ளது.
தாய் தந்தை துடிப்பு
விக்னேஷ் தீக்குளித்து விட்ட செய்தி அறிந்ததும் அவரது பெற்றோரும், அக்காவும் கதறித் துடித்தனர். உடனடியாக மன்னார்குடியிலிருந்து கிளம்பி சென்னைக்கு ஓடி வந்தனர். மருத்துவமனையில் தீய்ந்து போய் கிடந்த தங்களது பிள்ளையைப் பார்த்து துடித்தனர்.
இந்த இளம் வயதில் இப்படி அநியாயமாக விக்னேஷின் உயிர் பறி போயிருப்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது. போராட்டங்கள் உயிரைப் பறிக்கும் களமாக மாறி வருவதும் அனைவரையும் பெரும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.