விஜய்யுடன் நின்றவர்களுக்கே அமைச்சரவையில் இடம்.. கடைசி நேரத்தில் தவெகவில் இணைந்தவர்கள் புறக்கணிப்பு!
சென்னை: தவெக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், விஜய் தன்னுடன் நின்றவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்திருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக தவெக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படுவதற்கு முன் கட்சியில் இணைந்த பலருக்கும் முதல்வர் விஜய் அமைச்சர் வாய்ப்பை அளிக்கவில்லை என்று அக்கட்சியினர் பேசி வருகின்றனர்.
தமிழக முதல்வராக விஜய் மே 10ஆம் தேதி பதவியேற்ற நிலையில், அவருடன் சேர்ந்து 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்டனர். தற்போது 11 நாட்களுக்கு பின் தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக தவெகவைச் சேர்ந்த 21 பேரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 பேரும் அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்டனர்.

விரைவில் விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெற உள்ளன. இந்த அமைச்சரவையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பலருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வினோத், கடலூர் எம்எல்ஏ ராஜ் குமார், ராஜபாளையம் எம்எல்ஏ ஜெகதீஸ்வரி, விஜய் பாலாஜி, தமிழன் பார்த்திபன், ரமேஷ், தென்னரசு, சம்பத் குமார், பர்வேஸ், விக்னேஷ், விஜயலட்சுமி ஆகிய 13 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சத்தியபாமா, ஆர்.எஸ்.முருகன், கருப்பையா, விஎஸ் பாபு, கல்லணை, தங்கப்பாண்டி, முஸ்தபா உள்ளிட்டோருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உட்கட்சி பூசல் காரணமாக சிலருக்கு மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அமைச்சரவையில் விஜய் நம்பிக்கையை பெற்றவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
திமுக மற்றும் அதிமுகவில் இருந்து கடைசி நேரத்தில் தவெக பக்கம் தாவியர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. தவெக எம்எல்ஏ மீது முழுமையாக நம்பிக்கை வைத்தால் மட்டுமே அமைச்சரவையில் இடம் கொடுக்க விஜய் பரிசீலனையே செய்திருக்கிறார். இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கும் அமைச்சர்கள் கிடைக்கவில்லை.
8 மாவட்டங்களில் தவெக வெல்லவில்லை. அதேபோல் திண்டுக்கல், பெரம்பலூர், விழுப்புரம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அமைச்சர்கள் தேர்வு செய்யப்படவில்லை. அதேபோல் சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் கூட நியமிக்கப்படவில்லை. இதனால் தவெக எம்எல்ஏ-க்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications