ஊரே வெள்ளத்தால் நொந்து போய்க் கிடக்கும் நிலையில்... இவங்க போடுற சண்டையைப் பாருங்க
சென்னை: சென்னை நகர மக்கள் கன மழை மற்றும் அதனால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்னும் மீளாத நிலையில் காங்கிரஸ்காரர்களின் கோஷ்டி சண்டை வேறு மறுபக்கம் நாளுக்கு நாள் நாறிக் கொண்டே போகிறது.
காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும், மகளிர் காங்கிரஸ் தலைவரான விஜயதாரணிக்கும் இடையேதான் சமீப காலமாக சண்டை நாறிப் போய்க் கொண்டிருக்கிறது. இளங்கோவனைப் பற்றி சரமாரியாக சமீபத்தில் புகார் கூறியிருந்தார் விஜயதாரணி. மேலும் விஜயதாரணி தரப்பும், இளங்கோவன் தரப்பும் மாறி மாறி போலீஸில் புகார் கொடுத்தது.

இந்த நிலையில், தற்போது ராகுல் காந்தியின் சென்னை வருகையை முன்வைத்து ஒரு புதுப் பஞ்சாயத்தைக் கிளப்பியுள்ளார் விஜயதாரணி. ராகுல் காந்தி நேற்று புதுச்சேரி மற்றும் சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
முடிச்சூர், மணிமங்கலம், வில்லிவாக்கம் பகுதிகளில் அவர் சேதப் பகுதிகளை நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் இரவில் விமான நிலையம் வந்தார். அங்கிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
அங்குதான் பிரச்சினை ஏற்பட்டது. ராகுல் காந்தியை வழியனுப்பி வைக்க இளங்கோவன் தலைமையில் காங்கிரஸார் திரண்டிருந்தனர். ஆனால் விஜயதாரணியைக் காணவில்லை. ராகுல் காந்தி பயணத்தின்போது கூடவே இருந்தவர் விஜயதாரணி. இளங்கோவன் நிற்கும் இடமெல்லாம் பார்த்துப் பார்த்து அவரும் கூடவே போய் நின்று இளங்கோவன் தரப்பை கடுப்பேற்றிக் கொண்டிருந்தார். ஆனால் விமான நிலையத்தில் அவரைக் காணவில்லை.
இதுகுறித்து விஜயதாரணி கூறுகையில், என்னையும், சின்னாரெட்டியையும் ராகுல் வந்த முடிச்சூர் பகுதிக்கு பொறுப்பாளர்களாக நியமித்து இருந்தார்கள். அங்குள்ள பணிகளை முடித்ததும் ராகுலை வழியனுப்புவோர் பெயர் பட்டியலில் எனது பெயர் இருப்பதாகவும், எனவே விமான நிலையத்துக்கு வரும்படியும் அழைத்தார்.
அதன்பேரில் விமான நிலையம் சென்றேன். ஆனால் பெயர் பட்டியலில் இருந்து என பெயரையே நீக்கிவிட்டு பாசும் தரவில்லை. இது இளங்கோவனின் திட்டமிட்ட செயல். என்னைப்போல் கோபிநாத் எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி ஆகியோரும் அனுமதிக்கப்படவில்லை. திட்டமிட்டு எங்களை அவமானப்படுத்தி விட்டார்கள்.
இதுபற்றி டெல்லி தலைமையிடம் புகார் செய்து அவர்களிடம் அனுமதி பெற்று சபாநாயகரிடம் புகார் தெரிவிக்க திட்டமிட்டுள்ளேன். ஒரு எம்.எல்.ஏ.வை விமான நிலையத்தில் அனுமதிக்காமல் இளங்கோவன் தூண்டுதலால் பிடித்து தள்ளியது உரிமையை பறிப்பதாகும் என்றார்.
இவங்களுக்கு மட்டும் எப்படித்தான் லட்டு லட்டா பிரச்சினைகள் சிக்குகிறதோ!












Click it and Unblock the Notifications