அதெப்படி எனக்கு சமமான பதவியை விஜயதாரணிக்கு கொடுக்கலாம்? கொந்தளிக்கும் நடிகை நக்மா
சென்னை: நகமும், சதையுமாக இருந்த நக்மாவும், விஜயதாரணியும் இப்போ எலியும் பூனையுமா மாறப்போறாங்களாம். காரணம், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியை தனக்கு சமமாக விஜயதாரணிக்கு எப்படி கொடுக்கலாம் என்று நக்மா அதிருப்தி அடைந்துள்ளதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியமனம் செய்யப்பட்டார் எம்.எல்.ஏ விஜயதாரணி. அது முதலே ஊடகங்களில் பேட்டிகள், விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பு என படு பிசியாகவே இருந்தார். அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த நக்மா உடன் நட்பு பாராட்டினார்.

மகளிர் காங்கிரஸ் கட்சி தலைவி விஜயதாரணிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கும் அடிக்கடி உரசல் ஏற்பட்டது. இது அக்டோபர் மாதம் பிரச்சினையாக வெடித்தது. ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகள் கூறி மோதிக்கொண்டனர்.
மாறி மாறி இருவரும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கவே, கட்சித்தலைமை இருவரையும் அழைத்து விளக்கம் கேட்டது. ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும், விஜயதாரணியும் டெல்லி சென்று விளக்கம் அளித்தனர்.
இதன் தொடர்ச்சியாக விஜயதாரணி தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவி பொறுப்பில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 22ம்தேதி நீக்கப்பட்டார். அவருக்கு பதில் புதிய தலைவியாக ஜான்சிராணி நியமிக்கப்பட்டார்.
தான் நீக்கப்பட்டதற்கு இளங்கோவன் தான் காரணம் என்று குற்றம் சாட்டிய விஜயதாரணி, ராகுல் காந்தியை சந்தித்து இது பற்றி முறையிடுவேன் என்று ஆவேசமாக கூறினார். மேலும் இளங்கோவன் தொடர்ந்து பெண்களை இழிவுப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து அரசியல் நடவடிக்கையில் பங்கேற்காமல் சட்டசபை பணிகளில் மட்டும் விஜயதாரணி கவனம் செலுத்தி வந்தார். இதனைத் தொடர்ந்து மீண்டும் இரு தலைவர்களையும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் டெல்லி வரவழைத்து கட்சிப்பணிகளில் ஒருங்கிணைந்து செயல்படும் படி அறிவுறுத்தினார்கள்.
விஜயதாரணிக்கு பதவி
இந்த நிலையில் விஜயதாரணியை அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக காங்கிரஸ் மேலிடம் நேற்று நியமதித்துள்ளது. இது அவரது எதிர் கோஷ்டிக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
மகிழ்ச்சியில் விஜயதாரணி
தான் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து விஜயதாரணி எம்.எல்.ஏ. மகிழ்ச்சி தெரிவித்தார். அவர் கூறுகையில், கட்சிக்கு உண்மையாக பணியாற்றினால் அதற்கான தகுதியை தலைமை வழங்கும் என்பதற்கு நானே உதாரணம். இதற்காக கட்சி தலைமைக்கு நன்றி தெரிவிக்கிறேன். கட்சிப் பணிகளில் மாநிலத் தலைவர் இளங்கோவனுக்கு உறுதுணையாக இருப்பேன் என்றார்.
கோஷ்டி பூசல்
காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருக்கும் நடிகை குஷ்பு, இளங்கோவன் ஆதரவாளராக செயல்பட்டதால் அவரது முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் நக்மாவுக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. அதன்பிறகு தமிழக மகளிர் காங்கிரசில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை அடைந்தது.
மகளிர் அணி மல்லுக்கட்டு
மகளிர் அணி தலைவி பதவியில் இருந்து நீக்கப்பட்ட விஜயதாரணிக்கு தற்போது அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அதே பதவியில் இருக்கும் நக்மா அதிருப்தி அடைந்துள்ளாராம். இதுநாள்வரை குஷ்பு உடன் மல்லுக்கட்டிய விஜயதாரணி இனி நக்மா உடன் மல்லுக்கட்டுவாரோ?












Click it and Unblock the Notifications