‘வாயை மூடிப் பேசவும்'... "கேப்டனுக்கு" அன்புக் கட்டளையிடும் உளுந்தூர்பேட்டை தொண்டர்கள்!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் உளுந்தூர்பேட்டை தொகுதியில், அவர் பேசாமல் வணக்கம் மட்டும் கூறி வாக்குச் சேகரித்தால் போதுமானது என அவரது கட்சி நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனராம்.
தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி மக்கள்நலக் கூட்டணியுடன், தேமுதிக கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் தமாகாவும் இடம் பெற்றுள்ளது.
இந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட இருக்கிறார்.

கன்பியூசன்...
இந்நிலையில், நேற்று முன் தினம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த விஜயகாந்த், பின்னர் அங்கு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தனது தொகுதியை உளுந்தூர்பேட்டை என்பதற்குப் பதிலாக உடுமலைப்பேட்டை என அவர் உச்சரித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

மக்கழே...
இதுமட்டுமின்றி சமீபகாலமாக அவர் பங்கேற்கும் அனைத்து பிரச்சார கூட்டங்களிலும் சர்ச்சைக்குரிய வகையில் ஏதாவது செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். எங்கோ ஆரம்பித்து, எங்கோ போய் அவரது பிரச்சாரம் முடிவதாக மக்கள் வெளிப்படையாகவே விமர்சிப்பதைக் காண முடிகிறது.

சொந்தத் தொகுதியில்...
இந்த சூழ்நிலையில் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருப்பதால், தான் போட்டியிடும் உளுந்தூர்பேட்டை தொகுதியில் மட்டும் ஒரு வாரம் தங்கி பிரச்சாரம் மேற்கொள்வது என விஜயகாந்த் முடிவு செய்துள்ளாராம்.

8ம் தேதி முதல்...
அதன்படி, அடுத்தமாதம் 8ம் தேதி முதல் 14ம் தேதி வரை அவர் உளுந்தூர்பேட்டையில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். ஆனால், வழக்கம் போல் தனது அதிரடிசெய்கைகள் மற்றும் பேச்சால் விஜயகாந்த் ஏதாவது செய்யப்போக, அது அவரது வெற்றியைப் பாதித்துவிடக் கூடாது என அவரது கட்சி நிர்வாகிகள் கருதுகின்றனராம்.

வணக்கம் போதும்...
எனவே, உளுந்தூர்பேட்டையில் வெறும் வணக்கம் மட்டும் கூறி விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டால் போதுமானது. வேறு எதுவும் பேச வேண்டாம் என்பது அவர்களின் அன்புக் கட்டளையாம். ஆனால், இதற்கு எந்தளவிற்கு விஜயகாந்த் ஒத்துழைப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications