சபாஷ், சட்டசபையில் சூப்பரா பேசினீங்க: தேமுதிக எம்.எல்.ஏ.க்களுக்கு பணமுடிப்பு வழங்கிய விஜயகாந்த்
சென்னை: சட்டசபையில் நடந்த விவாதத்தின்போது சிறப்பாக பேசிய தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை பாராட்டி அவர்களுக்கு தலா ரூ.1000 ரொக்கப் பரிசு வழங்கியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
அதிமுக, தேமுதிக கூட்டணி உடைந்த பிறகு விஜயகாந்த் சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார். ஆனால் தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தி அவர்களின் செயல்பாட்டை கண்காணித்தும் வருகிறார் விஜயகாந்த்.
தற்போது சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாத்தில் தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் தங்களின் துறைகள் குறித்து விவாத நேரத்தின்போது பேசுகிறார்கள். அந்த துறைகளில் உள்ள குறைகளை எடுத்துரைத்து வருகிறார்கள்.
சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய விஜயகாந்த் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை வீட்டுக்கு அழைத்து பேசியுள்ளார். அப்போது சட்டசபையில் சிறப்பாக பேசிய எம்.எல்.ஏ.க்களை பாராட்டி அவர்களுக்கு தலா ரூ.1,000 ரொக்கப்பரிசு வழங்கியுள்ளார்.
மேலும் தன்னிடம் பாராட்டு பெற்றதை போன்று சிறப்பாக செயல்பட்டு தொகுதி மக்களிடமும் பாராட்டு பெற வேண்டும் என்று அவர் எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளாராம்.