பதவி, ஆட்சிக்காக 2 பேருமே டிராமா போடுறாங்க மக்களே.. விஜயகாந்த் அட்டாக்!
பதவி மற்றும் ஆட்சிக்காக அதிமுகவும் திமுகவும் நடத்தும் நாடகம்தான் நேற்று சட்டசபையில் அரங்கேறியது என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை: சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற போது நடைபெற்ற களேபரம் அனைத்தும் அதிமுக திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் பதவிக்காக போடும் நாடகம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சட்டசபையில் நடந்த நிகழ்வுகளை காணும் போது அவை அனைத்தும் சட்டசபை மரபுகளை முற்றிலும் மறந்து நடைபெற்ற செயல்களாகவே உள்ளது. பதவிக்காகவும், ஆட்சிக்காவும் அதிகாரப் போட்டியில் அதிமுகவும் திமுகவும் தனது நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன என்பது இந்த நிகழ்வுகளில் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
ஆட்சிக்கு வந்ததும் திடீரென பால் விலை உயர்வு, பேருந்து பயண கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை தேர்தல் அறிக்கையில் கூறாமல், பின் ஏன் உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்று தேமுதிக எதிர்கட்சியாக இருந்தபோது சட்டப் பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, மக்கள் பிரச்சனைக்காக கேள்வி எழுப்பிய தேமுதிக உறுப்பினர்கள் அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதையும், அவையில் இருந்து அகற்றப்பட்ட நிகழ்வுகளையும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

நாடகம்
ஆனால், தற்போது நடந்த நிகழ்வுகளை பார்க்கும் போது கட்சி பிளவுப்பட்டு இருக்கின்ற வேளையில், ஆட்சியை தக்க வைத்து கொள்ள அதிமுகவினரும், திமுக பொறுத்துவரை அதிமுகவின் இந்த நிலையை பயன்படுத்தி சந்தடி சாக்கில் உள்ளே புகுந்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக சட்டப்பேரவையில் நடந்த குழப்பத்தை பயன்படுத்த முயன்றது தெளிவாக அத்தனை மக்களுக்கும் புரிந்துள்ளது. எனவே, திமுக செய்யும் ஒவ்வொரு நாடகமும் மக்களுக்கு பட்டவர்த்தனமாக தெரிகிறது.

தாக்கப்பட்ட சபாநாயகர்
சபாநாயகர் தான் தாக்கப்பட்டதாகவும், தன் சட்டை கிழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறார். ஆனால், சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியே வந்து பத்திரிகையாளர் மத்தியில், தனது சட்டை கிழிக்கப்பட்டதாக சபாநாயகர் நீலிக்கண்ணீர் வடிப்பதாகக் கூறுகிறார்.

எள்ளி நகையாடுதல்
தனது சட்டையை தானே அவிழ்த்து விட்டதோடு, பத்திரிகையாளர்களை அழைத்து நடந்த சம்பவங்களை தெரிவிப்பது போன்ற ஒரு நாடகத்தை கட்டவிழ்த்து தமிழகம் மட்டும் அல்லாமல் இந்திய அளவிலும் உலக அளவிலும் அனைவரும் பார்த்து எள்ளி நகையாடும் வண்ணம் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலினின் செயல் அமைந்திருந்தது.

பழிபோடும் திமுக
எப்படியாவது ஆட்சியை கலைத்து தனது கனவை நிறைவேற்றிக்கொள்ள ஸ்டாலின் திட்டமிட்டு அரங்கேற்றிய நாடகம் இது. அவரது கனவு பலிக்காததால், யார் மீதாவது பழியை போட்டுவிட்டு ஆதாயம் தேடவேண்டும் என்று நினைக்கிறார்.

முற்றுபுள்ளி
திமுக அதிமுக நடத்தும் நாடகங்களை அவர்களுக்கு வாக்களித்த தமிழக மக்கள் மொத்தமாக கவனித்து கொண்டிருக்கிறார்கள். இரண்டு கட்சிகளும் பணம் பதவிக்காக போடும் வேஷங்களை அறிந்து கொண்டுள்ளார்கள். வெகு விரைவில் இதுபோன்ற கேவலமான அசிங்கமான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து வரும் காலத்தில், மிகப்பெரிய மாற்றத்தோடு நல்லாட்சி அமைய அத்தனை மக்களும் தங்களை தயார்படுத்தி கொள்ள தொடங்கி விட்டார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.

நன்மை உண்டா
இதுவரை திமுகவிற்கும் அதிமுகவிற்கும் ஆட்சி செய்யும் அதிகாரத்தை மாற்றி மாற்றி மக்கள் அளித்தார்கள். இருக்கும் சிறிது காலத்திற்குள் மக்களுக்கு நன்மை செய்ய முடியுமா என்பதைத்தான் ஆட்சியாளர்கள் பார்க்கவேண்டும்.

தில்லுமுல்லு
சபாநாயகரை பேசவிடாமல் திமுகவினர் தடுப்பது, அவரது இருக்கையில் ஒருவர் மாறி ஒருவர் அமருவது, மைக்கை பிடுங்கி அவரிடம் நீட்டி பேசு பேசு என அராஜகத்தில் ஈடுபடுவது, கையை பிடித்து இழுப்பது, சட்டையை கிழிப்பது, காகிதத்தை கிழித்து வீசுவது போன்ற சட்டமன்ற நிகழ்வுகளை பார்க்கும்போது, தி.மு.க. என்றாலே தில்லுமுல்லு கட்சி என்றும் ரவுடி கட்சி என்றும் அழைக்கப்படுதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது.

நடுநிலை
சட்டப்பேரவை தலைவர், உறுப்பினர்களால் செயல்பட விடாமல் தடுக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் உலகமே பார்த்து கொண்டிருந்த இந்த வேளையில் அவர் தனது சமூகத்தையும், தான் சார்ந்த ஜாதியையும் முன் நிறுத்தி வெளிப்படுத்திய கருத்து சபையின் மாண்பையும் கண்ணியத்தையும் கெடுக்கும் வகையில் உள்ளது. கட்சிகளுக்கும் ஜாதி பேதங்களுக்கு அப்பாற்பட்டு நடுநிலையோடு செயல்பட வேண்டிய சடடப்பேரவை தலைவர், சாதியை முன்னிறுத்தி பேசி இருப்பது கண்டத்துக்குரியது.

எத்தனை ஆண்டுகள் சஸ்பெண்ட்?
இரண்டு கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க தயாராகி விட்டார்கள். தேமுதிகவை சார்ந்தவர்கள் மக்கள் பிரச்சனைக்காக அவையில் குரல் கொடுத்தபோது, சஸ்பெண்ட் செய்த இதே சபாநாயகர், இன்றைக்கு அனைவரும் பார்க்ககூடிய அராஜகத்தை அரங்கேற்றிய திமுகவினரை எத்தனை ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்யப்போகிறார் என மக்கள் கேள்வி எழுப்புவதை கேட்க முடிகிறது. நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும் என்ற கூற்றுப்படி இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள் அமைந்திருப்பது நிரூபனமாகி உள்ளது என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications