எம்எல்ஏக்களுடன் ஆளுநர் ரோசய்யாவைச் சந்தித்தார் விஜயகாந்த் - 40 நிமிடம் பேச்சு!

இந்தச் சந்திப்பின்போது தாதுமணல் கொள்ளையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி 5 பக்க மனுவை அளித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை விஜயகாந்த் வந்தார். தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன், மாநில இளைஞரணிச் செயலாளர் எல்.கே.சுதீஷ், சட்டப்பேரவை கொறடா வி.பி.சந்திரகுமார் உள்பட தேமுதிகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 22 பேரும், சென்னை மாவட்டச் செயலாளர் 4 பேரும் உடன் சென்றனர். இந்தச் சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது.
இந்தச் சந்திப்புக்கு பிறகு விஜயகாந்த் செய்தியாளர்களிடம், "அரசைக் குறை கூறும் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் மீது அவதூறு வழக்குகள் போடப்படுகின்றன. தமிழகத்தில் மணல் கொள்ளை அதிகரித்துள்ளது. இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப் படுகின்றன.
100 ஏக்கர் கனிம நிலங்கள் ரூ.18-க்கு தனியாருக்கு விற்கப்பட்டுள்ளன. சாதாரண மக்களுக்கு இதுபோல கிடைக்குமா. இவை தொடர்பாக ஆளுநரிடம் புகார் தெரிவித்து, மணல் கொள்ளையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என புகார் அளித்தாகத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications