தான் புடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு சொல்றார் நத்தம் விஸ்வநாதன்: போட்டு தாக்கும் விஜயகாந்த்
சென்னை: மின்துறையில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப் போவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஒரே பொய்யை திரும்ப திரும்ப கூறுவதாகவும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் மேட்டூர், தூத்துக்குடி, வடசென்னை போன்ற மின்னுற்பத்தி நிலையங்களில் பணிபுரியக்கூடிய அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் தீபாவளியை முன்னிட்டு வழங்கப்படும் கருணைத்தொகை சமீபகாலமாக ஒரு சிலருக்கு வழங்கியும், பலருக்கு வழங்காமலும் ஒரு கண்ணில் வெண்ணையும், மறு கண்ணில் சுண்ணாம்பையும் வைப்பதுபோல் மனித நேயம் இல்லாமல், ஆளும் அதிமுக அரசு நடந்துக்கொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பணி நிரந்தரம்வேண்டி ஒப்பந்த தொழிலாளர்கள் எவ்வளவோ போராடியும், அவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்காமல் இதுபோன்ற ஆறுதல் தொகையையும்கூட கொடுக்க மறுப்பது என்ன நியாயம்?.
தொழிலாளர்களின் குடும்பங்கள் படும் கஷ்டங்கள் இதனால் தீரப்போவதில்லை என்றாலும், இதுபோன்ற பண்டிகை காலங்களில் அவர்களுக்கு கொஞ்சம் உதவியாக இருக்கும் என்பதை மனதில் கொண்டு இந்த அரசு தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்று பார்க்காமல் அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் பாரபட்சமின்றி தீபாவளி கருணைத்தொகையை உடனடியாக வழங்கிடவேண்டும்.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் அவரது துறையில் ஒப்பந்த தொழிலாளர்களே இல்லை என்று அப்பட்டமாக பொய்யான தகவலை தெவித்துள்ளார். ஆனால் தமிழகத்தில் மறைமுகமாக எவ்வளவோ ஒப்பந்த தொழிலாளர்கள் இன்னும் பணியாற்றி கொண்டிருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று சொன்ன பொய்யையே திரும்பவும் சொல்லாமல், அத்தனை ஒப்பந்த தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய முன்வரவேண்டும். இல்லையென்றால் அவர்கள் அத்தனை பேரையும் ஒன்று திரட்டி தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவையின் சார்பில் எனது தலைமையில் இந்த அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications