சசிபெருமாள் மரணம் அதிர்ச்சி தருகிறது.. விஜயகாந்த் வேதனை!
சென்னை: தமிழகத்தில் பூரண மதிவிலக்கை அமல் படுத்தக் கோரி போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வந்த காந்தியவாதி சசிபெருமாள் மறைவிற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், "தமிழ் நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, நீண்டகாலமாக தனி மனிதனாக போராடிவந்த காந்தியவாதி பெரியவர் சசிபெருமாள், கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடை பேரூராட்சியில் உள்ள தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி அப்பகுதிமக்களுடன் பலமுறை போராட்டம் நடத்தியுள்ளார்.
இன்று காலை அங்குள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறி அந்த டாஸ்மாக் மதுக்கடையை அகற்றுவதற்கு அதிமுகஅரசு உறுதியளிக்கவேண்டும், இல்லையென்றால் தன்னுயிரை மாய்த்துக்கொள்வதாகக்கூறி காந்தியவாதி சசிபெருமாள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் அதிமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், போராட்டக்களத்திலேயே அவர் உயிரிழந்தார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன்.
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் காந்தியவாதி சசிபெருமாள் மறைவிற்கு இரங்கல் pic.twitter.com/T9U3snR7RG
— DMDKParty (@dmdkparty2005) July 31, 2015
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இந்த சம்பவத்திற்கு பிறகாவது பூரண மதுவிலக்கை அமல்படுத்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா முன்வரவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.