திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப.. வடிவேலு பட பாணியில் குழப்பிப் பேசிய விஜயகாந்த்!

திருப்பூர் தொகுதி தொடர்பாகவும், தேமுதிக - பாஜக இடையே குழப்பம் நிலவுகிறது. காரணம், இந்தத் தொகுதியை முதலில் தனக்காக ஒதுக்கி வைத்திருந்தது பாஜக. பின்னர் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி இதைக் கேட்டு அடம் பிடித்ததால் அதற்கு ஒதுக்கி விட்டது.
ஆனால் தேமுதிகவும் இந்தத் தொகுதியை எதிர்பார்த்திருந்தது. ஆனால் அது கிடைக்காமல் போனதால் டென்ஷன் ஆன தேமுதிகவினர் திருப்பூரில் தீக்குளிப்பு, போராட்டம் என்று இறங்கினர். இதனால் அங்கு யார் போட்டியிடப் போவது என்றே தெரியவில்லை.
இந்த நிலையில் அவசரம் அவசரமாக அவர் பாட்டுக்குப் பிரசாரம் செய்யக் கிளம்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், பல தொகுதிகளில் வேட்பாளர் யார் என்றே தெரியாமல, போட்டியிடும் கட்சி தெரியாமல் அவர் பாட்டுக்குப் பிரசாரம் செய்து பேசிக் கொண்டே போகிறார்.
அதே போல திருப்பூருக்கும் அவர் பிரசாரம் செய்ய வந்தார். வந்தவர் ஒரே விரக்தியாகப் பேசினார். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லியபடியும் பிரசாரம் செய்தார். இதனால் பேச்சைக் கேட்க கூடியவர்கள் பெரும் குழப்பமாகிப் போனார்கள்.
அவர் பேசியதில் தெளிவாகப் புரிந்த ஒரே வார்த்தை மக்களே என்பது மட்டுமே. மேலும் - இங்கு எந்தக் கட்சி நின்றாலும் நீங்கள் நல்லபடியாக வேலை பார்க்க வேண்டும் - இந்த வார்த்தையை தொடர்ந்து அவர் தனது பேச்சுக்கு மத்தியில் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தார்.
மக்கள் குழப்பம் மற்றும் கடுப்புடன் இருப்பதை உணர்ந்தாரோ என்னவோ திடீரென, மக்களே, உங்களைப் போலதான் எனக்கும் சத்தியமா தெரியலை. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தேசியக் கட்சிதான் தொகுதியை அறிவிப்பார்கள். நான் தமிழகம் முழுக்க சுற்றுப் பயணத்தில் இருக்கேன். நமக்குள்ள எந்த சண்டை சச்சரவு இல்லாம இருக்க வேண்டும். என் வேகத்துக்கு ஈடுகொடுத்து நீங்களும் தேர்தலில் வேலை பார்க்கணும் என்று கேட்டுக் கொண்டபடி பேச்சைத் தொடர்ந்தார்.
ஆளே இல்லாத இடத்தில் டீ ஆற்றுவது என்பது ரொம்பக் கஷ்டம்தான்...












Click it and Unblock the Notifications