தேமுதிக தொண்டர்களின் கோரிக்கையை விஜயகாந்த் பரீசிலிக்க வேண்டும்: தமிழிசை விருப்பம்
தென்காசி: தேமுதிக தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று கூட்டணி நிலைப்பாடு குறித்து விஜயகாந்த் பரீசிலனை செய்ய வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் தென்காசி சட்டசபை தொகுதிக்குட்பட்ட சுரண்டையில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: விஜயகாந்த் தொண்டர்களின் கோரிக்கை ஏற்று கூட்டணியை மறு பரிசீலனை செய்யவேண்டு என்பது எனது விருப்பம், திமுக, அதிமுகவை எதிர்க்க அனைத்து சக்திகளும் ஒன்று திரள வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், கடந்த 2014 ல் அமைந்த கூட்டணியை தற்போது உருவாக்க பிற கட்சிகளுடன் பேசி வருகிறோம், தமாகா தலைவர் வாசன் எங்கள் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம். அவரும் எங்களுடன் இணைந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். விஜயகாந்த் கட்சியை வளர்க்க பட்ட கஷ்டங்கள் தெரியும் ஆனால் தற்போது அந்த கட்சியில் ஒவ்வொருவராக வெளியேறும் நிலை உள்ளது.
ஏற்கனவே பாஜக முதற்கட்டமாக 54 வேட்பாளர்களை அறிவித்தது. அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் தேர்வு நடந்து வருகிறது. தொடர்ந்து கூட்டணி கட்சிகளுடன் பேசி வருகிறோம். பாஜக தேர்தல் அறிக்கைகளை தயார் செய்துவிட்டது. தொடர்ந்து சட்டமன்ற வாரியாக மக்களை சந்தித்து வருகிறோம். மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வண்ணம் 50 வீடியோ பிரச்சார வாகனங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
வரும் 13 ம் தேதி பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள வருகிறார். இன்று களத்தில் பலமாக உள்ளது பாஜக கூட்டணி மட்டும் தான். திமுக காங்கிரஸ் கூட்டணியை மக்கள் நிராகரித்து விட்டனர். ஆளும் அதிமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
மக்கள் நம்பிக்கைக்குரிய கட்சியான பாஜக விளங்குவதால் இந்த கூட்டணியில் கட்சிகள் இணைய வேண்டும். தமிழகத்தில் நான் போட்டியிடுவதற்காக தொண்டர்கள் 15 இடங்களில் விருப்பமான அளித்துள்ளனர். தலைமை எங்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கிறதோ அங்கு போட்டியிடுவேன் என தமிழிசை தெரிவித்தார்












Click it and Unblock the Notifications